கராச்சி: பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் அணிக்கான புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடருடன் ஒயிட் பால் கேப்டன்சியில் இருந்து பாபர் அசாம் விலகிய நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் தரப்பில் புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று பாபர் அசாம் கேப்டன்சியை ராஜினாமா செய்தார். அதன்பின் பாகிஸ்தான் அணியின் டி20 கேப்டனாக ஷாகீன் அப்ரிடி கொண்டு வரப்பட்டார். ஆனால் ஷாகீன் அப்ரிடியின் செயல்பாடுகள் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களிடையே திருப்தியை கொடுக்கவில்லை.

இதனால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் டி20 அணி கேப்டனாக மீண்டும் பாபர் அசாம் கொண்டு வரப்பட்டார். ஆனால் அப்போது லீக் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியது. இதன்பின் மீண்டும் கேப்டன்சியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் பாபர் அசாம். தொடர்ந்து பாகிஸ்தான் டெஸ்ட் அணியிலும் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் புதிய ஒயிட் பால் கேப்டனை நியமனம் செய்வதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் முடிவில் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் அணியின் புதிய ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு உறுதுணையாக இளம் வீரர் ஆகா சல்மான் துணைக் கேப்டனாக கொண்டு வரப்பட்டுள்ளார். இதுவரை முகமது ரிஸ்வான் ஒயிட் பால் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை ஒருமுறை கூட வழிநடத்தியதில்லை. ஆனால் நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் போது பாபர் அசாம் காயம் காரணமாக விலகியதால், 2 டெஸ்ட் போட்டியில் முகமது ரிஸ்வான் கேப்டனாக வழிநடத்தியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டனை தேர்வு செய்வதில் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனினின் பங்கும் இருந்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் அணிக்குள் ஏராளமான பிரிவுகள் இருந்து வந்தது. அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் ரிஸ்வான் செயல்பட்டு வந்ததோடு, பேட்டிங் ஃபார்மிலும் இருந்ததால் அவருக்கு கேப்டன்சி அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.