சிட்னி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி திரில் வெற்றி பெற்றது. ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியை பாகிஸ்தான் கடைசியாக வீழ்த்தி 2650 நாட்கள் ஆகிவிட்டன.
இத்தனை நாட்களாக ஆஸ்திரேலியாவிடம் டி20 போட்டிகளில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த பாகிஸ்தான், தற்போது சொந்த மண்ணில் அந்த சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கத்துக்குட்டி அணிகளை மட்டுமே பெருமளவில் வீழ்த்தி வந்த பாகிஸ்தான் அணிக்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது நம்பிக்கை அளித்துள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட் தலைமையில் களமிறங்கி ஆடியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலால் துவக்கத்திலேயே விக்கெட்டுகள் விழுந்தன. இந்த இக்கட்டான நேரத்தில் இளம் வீரர் சைம் அயூப் மற்றும் கேப்டன் சல்மான் அலி ஆகா ஜோடி பொறுப்புடன் விளையாடியது.
பதற்றம் அடையாமல் நிதானமாக ரன் சேர்த்த இந்த ஜோடி, 74 ரன்கள் கூட்டணி அமைத்தது. சைம் அயூப் 40 ரன்களும், சல்மான் 39 ரன்களும் சேர்த்தனர். இதனால் 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி வலுவான நிலையில் இருந்தது.
ஆனால், ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தார். அவரது சுழலில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜம்பா, பாகிஸ்தானின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். இதனால் கடைசி 10 ஓவர்களில் பாகிஸ்தான் அணியால் 76 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.
169 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தார். ஆனால், பேட்டிங்கில் ஜொலித்த சைம் அயூப் பந்துவீச்சிலும் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். துவக்க வீரர்கள் இருவரையும் அவரே வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
மேட் ரென்ஷா ரன் அவுட் ஆனது ஆஸ்திரேலியாவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. கேமரூன் கிரீன் மட்டும் தனி ஆளாகப் போராடினாலும், அவரும் 13வது ஓவரில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது சிறப்பாகப் பந்துவீசினார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கிய சைம் அயூப் பாகிஸ்தான் அணியின் வெற்றி நாயகனாகத் திகழ்ந்தார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா பதிலடி கொடுக்குமா? என்ற எதிரார்பு எழுந்துள்ளது.