மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருந்த பாபர் அசாம் ராஜினாமா செய்த நிலையில் புதிய கேப்டனாக முஹம்மது ரிஸ்வான் தலைமை தாங்கினார்.
முழு நேர கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியில் ரிஸ்வான் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மெல்போர்னில் விளையாடினார்.டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய வீரர்களின் அபார வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து தடுமாறினர்.

அப்துல்லா ஷபிக் 12 ரன்களில் ஆட்டம் இழக்க, பாகிஸ்தான் அணி 24 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பாபர் அசாம் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வந்தார்.
பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாபர் அசாம், ஆடல்சம்பா வீசிய பந்தை சரியாக கணிக்க தவறிய 44 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்த போது போல்ட் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடிய கம்ரான் குலாம் 5 ரன்களில் வெளியேற சல்மான் 12 ரன்கள் சேர்த்தார். கேப்டன் முகமது ரிஸ்வான் 71 பந்துகளை எதிர் கொண்டு 44 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார்.
இறுதியில் இர்பான் கான் 22 ரன்களும், ஷாகின் அப்ரிடி 24 ரன்களும் எடுக்க நசீம் ஷா மட்டும் அதிரடியாக விளையாடி நான்கு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசி 40 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் துணை நிற்காத நிலையில், பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 203 ரன்களில் சுருண்டது. பாகிஸ்தான் அணி 200 ரன்களை கூட தொடாத என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நசீம் ஷாவின் அதிரடி ஆட்டம் பாகிஸ்தானை கௌரவ இலக்கை எட்ட உதவியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சு தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளையும் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம்ஸ் சாம்பா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.