ராவல்பிண்டி: பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோத இருந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. ஏற்கனவே, பாகிஸ்தான் அணி இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது. இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறாவிட்டால் டெஸ்ட் தொடரை 0 - 1 என வங்கதேசத்திடம் தோல்வி அடைய நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில், இரண்டாவது போட்டியும் முதல் போட்டி நடந்த அதே ராவல்பிண்டி மைதானத்தில் நடக்க இருந்தது.

இரு அணி வீரர்களும் மைதானத்தில் கூடிய நிலையில், மழையின் காரணமாக போட்டி தாமதமானது. நீண்ட நேரம் அம்பயர்கள் மழை நிற்கும் என காத்திருந்தனர். எனினும், மழை தீவிரமாக பெய்து வந்ததை அடுத்து அம்பயர்கள் முதல் நாள் ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.
இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டாவது நாளும் மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதனால், இந்த போட்டி கடைசி மூன்று நாட்களாவது முழுமையாக நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிய அதிக வாய்ப்பு உள்ளது.
இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் வெல்லாவிட்டால் முதல் போட்டியை வென்ற வங்கதேசம் டெஸ்ட் தொடரை வென்று விடும். இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக வங்கதேசம் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பாகிஸ்தான் அணி வரலாற்றிலேயே மிக மோசமான டெஸ்ட் தொடர் தோல்வியை சந்திக்க நேரிடும்.
இந்தப் போட்டி முழுமையாக நடைபெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் வெற்றிக்கான முயற்சியை யாவது எடுக்க முடியும். ஆனால், வானிலை கூட பாகிஸ்தான் அணிக்கு எதிராகவே இருக்கிறது. வங்கதேசத்தை பொறுத்தவரை மழையால் அந்த அணிக்கு மகிழ்ச்சி தான். இரண்டாவது டெஸ்ட் போட்டியை டிரா செய்தால் கூட அந்த அணி வரலாறு படைக்கும். அடுத்து இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கும் நிலையில், இந்த வெற்றி வங்கதேச அணிக்கு பெரிய ஊக்கமாக அமையும்.