கராச்சி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலிக்கு அருகில் கூட பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாமால் வர முடியாது என்று முன்னாள் வீரர் டானிஷ் கனேரியா விமர்சித்துள்ளார். இருவரும் அடித்த ரன்களையும், படைத்துள்ள சாதனைகளையும் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும் என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம் 0 மற்றும் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதன் மூலமாக 15 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் பாபர் அசாம் திணறி வருவது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 இன்னிங்ஸ்களில் பாபர் அசாம் மொத்தமாக 320 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். இதனால் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களே அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் பாபர் அசாம் விளையாடியுள்ள எந்த கிரிக்கெட் தொடர்களிலும் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை.
பாகிஸ்தான் அணியின் தோல்விக்கும் பாபர் அசாமின் பேட்டிங் ஃபார்ம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டானிஷ் கனேரியா பேசுகையில், விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு யார் விளையாடி கொண்டிருக்கிறார்கள். எனக்கு இந்த ஒப்பீட்டை நினைத்து சோர்வடைந்துவிட்டேன்.
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி எவ்வளவு ரன்களை விளாசி இருக்கிறார் என்பதை பாருங்கள். நாம் நினைப்பதை விடவும் அவர் மிகப்பெரிய வீரர். அவர் ஜாம்பவான் அந்தஸ்தில் இருந்து வருகிறார். அவர் பேட்டிங் செய்ய வரும் போது இந்திய ரசிகர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியை சொல்லவே முடியாது. பாபர் அசாம் அவருக்கு அருகில் கூட இல்லை. அதனால் விராட் கோலி - பாபர் அசாமை ஒப்பிடுவதை நிறுத்துங்கள்.
மீடியாக்கள் டிஆர்பி-க்காக இதனை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் நம்பர்களை பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். அவர்கள் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின், ஸ்டாட்ஸ்களை ஒப்பிட்டாலே எளிதாக யார் சிறந்த வீரர் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரக் கூடாது என்பதே எனது கருத்தாக உள்ளது. ஏனென்றால் பாகிஸ்தானில் சூழல் சரியாகவில்லை. எனக்கு தெரிந்த வரை ஹைபிரிட் மாடலில் நடத்தவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.