ராவல்பிண்டி : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாமை அந்த நாட்டு ரசிகர்கள் பாகிஸ்தானின் விராட் கோலி என்று அழைப்பார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றிலே ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் தற்போது பாபர் அசாம் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்.
53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9 சதம், 26 அரைசதம் என 3920 ரன்கள் பாபர் அசாம் அடித்திருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் பாபர் அசாம் 117 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5729 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 19 சதம், 32 அரை சதம் அடங்கும். 123 சர்வதேச டி20 போட்டிகளில் பாபர் அசாம் 4,145 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று சதம், 36 அரை சதம் அடங்கும்.

இப்படி பாபர் அசாம், சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரராக இறங்கினார். இந்த நிலையில் பாபர் அசாம், கடைசியாக ஒரு நாள் கிரிக்கெட்டில் கடந்த உலகக்கோப்பை தொடரிலும் டி20 கிரிக்கெட்டில் கடந்த மே மாதமும் தான் அரை சதம் அடித்திருக்கிறார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாம், அரை சதம் அடித்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது.
கடைசியாக டிசம்பர் மாதம் 2022-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம் 161 ரன்கள் விளாசினார். அதன் பிறகு பாபர் அசாம் 14 இன்னிங்ஸ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில் ஒரு முறை கூட அவர் அரை சதம் அடிக்கவில்லை. 14, 24 ,27, 13,24,39, 21,14, 1, 41,26, 23 ,0, 22, 31, 11 ஆகிய ரன்கள் தான் பாபர் அசாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்திருக்கும் ஸ்கோர் ஆகும்.
சுமார் ஒன்றரை ஆண்டுகளாக ஒரு அரை சதம் அடிக்க முடியாமல் பாபர் அசாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வருகிறார். இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலாவது பாபர் அசாம். தன்னுடைய பழைய பார்மை மீட்பர் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதிலும் 0, 22,31, 11 ஆகிய ரன்களை தான் பாபர் அசாம் அடித்திருக்கிறார். தற்போது வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கடைசி இன்னிங்ஸில் கூட பாகிஸ்தான் அணி தடுமாறியபோது பாபர் அசாம் காப்பாற்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் பாபர் அசாம் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். வங்கதேசம் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதில் முஹம்மது ரிஸ்வான் 43 ரன்கள், சல்மான் அகா 47 ரன்கள் எடுக்க அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 172 ரன்களில் ஆட்டமிழந்தது.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்கதேச அணி விளையாடுகிறது பாபர் அசாம் சதம் அடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் நேபால் அணிக்கு எதிராக சதம் அடித்தார். இதனால் பாபர் அசாம் மீண்டும் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் இருக்கும் நிலையை பார்த்தால் பாபர் அசாம் அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.