டாக்கா: வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. டாக்காவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2018 ஆசியக் கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராகப் பெறும் முதல் ஒருநாள் வெற்றி இது. இதன்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 1-0 என முன்னிலை பெற்றது.
ஷேரே பங்களா ஸ்டேடியத்தில், பாகிஸ்தான் நிர்ணயித்த 115 ரன்கள் இலக்கை வங்கதேச அணி 15.1 ஓவர்களிலேயே எட்டியது. தொடக்க வீரர் டான்சித் ஹசன் தமிம் 42 பந்துகளில் 7 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 33 பந்துகளில் ஐந்து பவுண்டரிகளுடன் 27 ரன்கள் பங்களித்தார். பாகிஸ்தான் கேப்டன் ஷாஹீன் அப்ரிடி சைஃப் ஹசனையும், முகமது வசீம் ஜூனியர் ஷாண்டோவையும் வெளியேற்றினர்.

முன்னதாக, டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த வங்கதேசத்திற்காக, 23 வயதான அறிமுக வேகப்பந்து வீச்சாளர் நாகித் ராணா அசத்தினார். அவர் 5 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, பாகிஸ்தான் பேட்டிங் வரிசையைச் சரித்தார்.
வேகப்பந்து வீச்சாளர் டாஸ்கின் அகமது பந்துவீச்சைத் தொடங்க, அறிமுக வீரர்கள் சாஹிப்சாதா ஃபர்ஹான் 27, மாஸ் சதக்காத் களமிறங்கி 41 ரன்கள் சேர்த்தனர். ரானா, 10வது ஓவரில் ரன் எடுத்த ஃபர்ஹானை வெளியேற்றியதுடன், ஷாம்யல் ஹுசைன் 4மற்றும் சதக்காத் 18 ஆகியோரையும் அடுத்தடுத்து வீழ்த்தினார்.
ரானா, முகமது ரிஸ்வான் 10 மற்றும் சல்மான் அலி ஆகா ஆகியோரையும் வெளியேற்றினார். 18 ஓவர்களுக்குள் தனது ஐந்து விக்கெட்டுகளையும் பூர்த்தி செய்தார். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும், ஃபஹீம் அஷ்ரஃப் மறுமுனையில் சில பவுண்டரிகளை அடித்தார்.அறிமுக வீரர் அப்துல் சமத் ரன் ஏதும் இல்லாமல் வெளியேறினார். கேப்டன் ஷாஹீன் அப்ரிடி மிராஸின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். டாஸ்கின் அகமது, முகமது வசீம் ஜூனியரை டக் அவுட்டாகி வெளியேற்றினார்.

இறுதியாக, முஸ்தஃபிசுர் ரஹ்மான், ஃபஹீம் அஷ்ரஃபை 32 ரன்களில் வீழ்த்தி, பாகிஸ்தான் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அஷ்ரஃப் அப்ரார் அகமதுவுடன் இணைந்து 10வது விக்கெட்டுக்கு 32 ரன்கள் சேர்த்திருந்தார். தனது சிறப்பான பந்துவீச்சுக்காக நாகித் ராணா ஆட்டநாயகன் விருதை வென்றார்.இரண்டாவது ஒருநாள் போட்டி இவ்விரு அணிகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை அதே டாக்காவில் நடைபெற உள்ளது.