டாக்கா: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து, மிர்பூர் ஆடுகளம் சர்வதேச தரத்தில் இல்லை என பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளர் மைக் ஹெசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மிர்பூரில் நடைபெற்ற டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, வங்கதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இது வங்கதேசத்திற்கு எதிராக பாகிஸ்தானின் மிகக் குறைந்த டி20 ஸ்கோராகும்.

அந்த அணியில் ஃபக்கர் ஜமான் மட்டும் தனி ஒருவராகப் போராடி 44 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். வங்கதேசம் சார்பில் வேகப்பந்து வீச்சாளர்களான தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும், முஸ்தாபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
பின்னர் 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, பர்வேஸ் ஹொசைன் எமோனின் அபார அரைசதத்தின் (56* ரன்கள்) உதவியுடன் 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. அவருக்குத் துணையாக தௌஹித் ஹிரிடோய் 36 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறியதாவது: "இந்த வகையான ஆடுகளம் சர்வதேச தரத்தில் இல்லை. இது போன்ற ஆடுகளங்களில் விளையாடுவது எந்த அணிக்கும் முன்னேற்றத்திற்கு உதவாது. ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பைக்குத் தயாராகும் அணிகளுக்கு இது போன்ற ஆடுகளங்கள் ஏற்புடையதல்ல. "
"வங்கதேச அணி இதுபோன்ற ஆடுகளங்களில் வெற்றியைப் பெறலாம், ஆனால் இது ஒரு சிறந்த ஆடுகளம் அல்ல. வங்கதேச பிரீமியர் லீக் (BPL) போட்டிகளின் போது இங்கு நல்ல ஆடுகளங்கள் தயாரிக்கப்படுகின்றன, ஆனால் சர்வதேச போட்டிகளின் போது சொந்த மைதான அனுகூலத்தைப் பெறுவதற்காக மெதுவான மற்றும் தாழ்வான ஆடுகளங்களை உருவாக்குகிறார்கள். இது சரியல்ல," என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் பயிற்சியாளர் மட்டுமல்லாது, போட்டிக்கு முன்னதாக வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸும் இந்த ஆடுகளம் குறித்து கவலை தெரிவித்திருந்தார். மிர்பூர் ஆடுகளத்தில் தொடர்ந்து விளையாடுவது பல கிரிக்கெட் வீரர்களின் பேட்டிங் வாழ்க்கையை பாதித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி இதே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) நடைபெறவுள்ளது.