லாகூர்: பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச வீரர்களால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது. ஏனெனில், சமீபத்தில் வங்கதேச வீரர்கள் பாகிஸ்தானில் சரியான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும், மேலும் சில புகார்களையும் கூறி உள்ளனர். இது இன்னும் சில மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அதிர்ச்சியில் உள்ளது.
வங்கதேசத்தில் தற்போது உள்நாட்டு கலவரம் வெடித்து, சற்று அடங்கி உள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்த வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே பாகிஸ்தானுக்கு சென்று விட்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பும் வங்கதேச வீரர்கள் முன்கூட்டியே வருவதை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தது.

எனினும், பாகிஸ்தானில் வங்கதேச வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல் அறையில் இன்டர்நெட் வேகம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், அதனால் தங்களால் வங்கதேசத்தில் இருக்கும் தங்கள் குடும்பத்தினருடன் சரியாக ஆன்லைனில் கால் செய்து பேச முடியவில்லை எனவும் புகார் கூறி உள்ளனர்.
வங்கதேசதில் மோசமான சூழ்நிலை நிலவும் நிலையில், தங்கள் குடும்பத்தினருடன் அடிக்கடி தொடர்பில் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால், குறைவான இன்டர்நெட் வேகத்தால் சரியாக போன் செய்து பேச முடியவில்லை என அவர்கள் புகார் கூறி உள்ளனர். மேலும், வங்கதேச வீரர்களுக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கூடுதல் பாதுகாப்பின் காரணமாக தங்களால் சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை எனவும் அவர்கள் கூறி இருக்கின்றனர்.
இந்த தகவல்கள் நேரடியாக பத்திரிகைகளில் வெளியானது. இதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது. அடுத்து ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இதுபோன்ற புகார்கள் வெளியாக கூடும். மேலும், தொடர் தொடங்கும் முன்பே மற்ற அணிகள் வங்கதேச வீரர்கள் சொன்ன புகாரை சுட்டிக்காட்டி, தங்களுக்கு கூடுதல் வசதிகளை செய்து தருமாறு கேட்கக் கூடும். இது போன்ற சிக்கல்களை ஏற்படுத்திய வங்கதேச வீரர்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட்ட அமைப்பு அதிருப்தியில் உள்ளது.