ராவல்பிண்டி: பாகிஸ்தான் - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 565 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
4வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் சேர்த்திருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 5வது நாள் ஆட்டத்தை 94 ரன்கள் பின் தங்கிய நிலையில் தொடங்கியது. முதல் செஷனிலேயே கேப்டன் ஷான் மசூத் 14 ரன்களிலும், பாபர் அசாம் 22 ரன்களிலும், ஷக்கீல் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் இணைந்த ரிஸ்வான் - ஷஃபிக் கூட்டணி சிறிது நேரம் தாக்கு பிடித்தது. ஆனால் அப்துல்லா ஷஃபிக்கும் 37 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வீரர்களில் அடுத்தடுத்து சீட்டுக் கட்டை போல் சரிந்தனர். ஒருமுனையில் முகமது ரிஸ்வான் மட்டும் களத்தில் போராடி 51 ரன்கள் எடுத்தார். அவரும் மெஹிதி ஹசன் மிராஸ் பவுலிங்கில் போல்டாகி வெளியேற, பாகிஸ்தான் அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக 146 ரன்களில் ஆல் அவுட்டாகியுள்ளது. இதனால் வங்கதேச அணியின் வெற்றிக்கு வெறும் 30 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் வங்கதேச அணியின் ஜகிர் ஹசன் - இஸ்லாம் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் பவுண்டரிகள் மூலமாக விரைவாக ரன்கள் சேர்த்தனர்.
இறுதியாக 6.3 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்து வங்கதேசம் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக பாகிஸ்தான் அணியை முதல்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தி வங்கதேச அணி புதிய வரலாறு படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற சாதனையையும் வங்கதேசம் படைத்துள்ளது. இது பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.