ராவல்பிண்டி: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி இழந்து, அவமானத்தை சந்தித்துள்ளது. இந்த முறை தொடரை நடத்தும் அணியாகவும், முந்தைய சாம்பியனாகவும் இருந்தும், பாகிஸ்தான் அணி தனது முதல் இரண்டு குரூப் சுற்று போட்டிகளிலும் தோல்வியடைந்து, அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
ஆனால், இது பெரிய அவமானம் அல்ல எனச் சொல்லும் அளவுக்கு, இதைவிட இரண்டு மோசமான நிலைமைகள் பாகிஸ்தான் அணிக்கு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தாலும், குரூப் ஏ பிரிவில் வங்கதேசத்துக்கு எதிராக தனது கடைசி போட்டியில் விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும். ஒருவேளை இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே முந்தைய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பை வென்று, அடுத்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு புள்ளி கூட பெறாமல் குரூப் சுற்றிலிருந்து வெளியேறிய முதல் அணி என்ற மோசமான சாதனையை செய்யும் பாகிஸ்தான்.
இதற்கு முன், 2009 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணி, 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் வெளியேறியிருந்தது. ஆனால், அப்போது ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஆஸ்திரேலியாவுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது பாகிஸ்தான் அணி வங்கதேசத்துக்கு எதிராக தோல்வியடைந்தால், ஒரு புள்ளி கூட பெறாமல், ஒரு சாம்பியன் அணியாக இந்தத் தொடரிலிருந்து வெளியேறும்.
பாகிஸ்தான் - வங்கதேசம் மோத உள்ள போட்டி ராவல்பிண்டியில் நடக்க உள்ளது. அங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் போட்டி கைவிடப்பட்டு பாகிஸ்தான் அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் பாகிஸ்தான் ஒரு அவமானத்தில் இருந்து தப்பிக்கும்.
இது மட்டுமின்றி, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஒரு பாகிஸ்தான் வீரராவது சதம் அடிக்க வேண்டும். அப்படி அடிக்கவில்லை என்றால், அதுவும் ஒரு மோசமான அவமானமாக மாறிவிடும். ஏனெனில், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்றுள்ள எட்டு அணிகளில், பாகிஸ்தானைத் தவிர மற்ற ஏழு அணிகளின் பேட்ஸ்மேன்கள் ஒருவராவது சதம் அடித்துள்ளனர்.
இதுவரை ஆப்கானிஸ்தான் அணி மட்டுமே சதம் அடிக்காமல் இருந்து வந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் துவக்க வீரர் இப்ராஹிம் சத்ரான் 177 ரன்கள் குவித்து, 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தான் சார்பாக சதம் அடித்த வீரராகவும், மேலும் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே மிகப்பெரிய ஸ்கோரை அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதுவும் தற்போது பாகிஸ்தானுக்கு அழுத்தத்தை அளித்துள்ளது. இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில், பாகிஸ்தான் அணியில் அதிக ஸ்கோர் அடித்தது குஷ்தில் ஷா தான். அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக 69 ரன்கள் சேர்த்திருந்தது, அந்த அணியில் ஒரு தனி வீரரின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. எனவே, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவராவது சதம் அடிக்க முயற்சிக்க வேண்டும்.