கராச்சி: வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்திருப்பது அவமானத்தை கொடுத்திருப்பதாக கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற போது, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியடைந்ததன் மூலமாக பாகிஸ்தானின் கிரிக்கெட் தரம் வெளிப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி இழந்துள்ளது. 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 185 ரன்கள் இலக்காக நிர்ணயித்த நிலையில், வங்கதேசம் அணி 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில் இலக்கை எட்டி புதிய வரலாற்றை படைத்தது. சொந்த மண்ணிலேயே பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை இழந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதல் டெஸ்ட் போட்டியை இழந்த போது, 2வது டெஸ்ட் போட்டியை வென்று பாகிஸ்தான் அணி தொடரை சமன் செய்யும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் 2வது டெஸ்ட் போட்டியிலும் மோசமாக விளையாடி தோல்வியை சந்தித்திருப்பந்து கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணில் நடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் 6 தோல்வி, 4 டிரா என்று ஹோம் சீசனை மோசமாக முடித்துள்ளது.
இதன் மூலமாக 2 ஆண்டுகளில் சொந்த மண்ணில் ஒரு வெற்றியை கூட பாகிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பேசுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகும். நாம் பயணிக்கும் பாதை மாறிவிட்டதாக நினைக்கிறேன்.
நாம் முன்னேறி செல்லாமல், தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறோம். ஒரு முன்னாள் வீரராக, கிரிக்கெட் ரசிகராக அவமானமாக இருக்கிறது. ஏனென்றால் நல்ல நிலையில் இருந்து தோல்வியை சந்தித்துள்ளோம். இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. சொந்த மண்ணில் நடந்த போட்டிகளை தொடர்ச்சியாக இழந்திருக்கிறோம்.
இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை தரத்தை வெளிப்படையாக புரிந்து கொள்ள முடிவதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் போதுமான திறமையான வீரர்கள் இல்லை என்று கருதுகிறேன். எந்த வீரருக்காகவாது காயம் ஏற்பட்டால் கூட, அவர்களுக்கான பேக் அப் கூட நம்மிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் அடுத்ததாக அக்டோபரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. சொந்த மண்ணில் நடப்பதால் பாகிஸ்தான் அணி வீரர்கள் தீவிரமாக தயாராக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இம்முறையாவது சொந்த மண்ணில் போட்டிகளை பாகிஸ்தான் அணி வெல்லுமா என்று அந்நாட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த முறை பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. இதனால் பாகிஸ்தான் அணி இம்முறை பதிலடி கொடுக்குமா, இங்கிலாந்து அணியின் பேஸ் பால் அட்டாக்கை தடுத்து நிறுத்தி மீண்டெழுமா என்று விவாதங்கள் தொடங்கியுள்ளன.