இஸ்லாமாபாத்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான தோல்வியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனும், முன்னாள் பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான் கான் சிறையில் இருந்து அனுப்பி இருக்கும் செய்தியில் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
இராண்டரை ஆண்டுகளுக்கு முன் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய இதே பாகிஸ்தான் அணி தற்போது வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்து இருப்பதாக கூறி இருக்கிறார். பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருக்கும் மொஹ்சின் நக்வி தான் என குற்றம் சுமத்தி இருக்கிறார்.

இது குறித்து இம்ரான் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போதைய பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவருமான மொஹ்சின் நக்வி குறித்து கூறியிருப்பது இதுதான் - "மொஹ்சின் நக்வி துபாயில் தனது மனைவியின் பெயரில் 50 லட்சம் டாலருக்கு சொத்துக்களை வாங்கி இருக்கிறார். கோதுமை கொள்முதல் ஊழலில் ஈடுபட்டு இருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய மோசடி தேர்தலின் பின்னணியில் இருக்கிறார். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?"
"தொலைக்காட்சியில் கிரிக்கெட் விளையாட்டை மட்டும்தான் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் பார்த்து வந்தது. அதைக் கூட இவர்கள் அழித்து விட்டார்கள். தகுதி இல்லாத நபர்களை, சக்தி வாய்ந்த இடங்களில் இருந்து கொண்டு வந்து அதிகாரிகளாக நியமித்து, கிரிக்கெட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் அணி முதல்முறையாக உலகக் கோப்பையில் முதல் நான்கு இடங்களிலோ, டி20 உலக கோப்பையில் முதல் 8 இடங்களிலோ கூட இடம் பெறவில்லை."
"நேற்று வங்கதேசத்துக்கு எதிராக அவமானகரமான முறையில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருக்கிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்த அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டரை ஆண்டுகளில் என்ன நடந்து விட்டது? நாம் இப்போது வங்கதேசத்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருக்கிறோம்? இந்த வீழ்ச்சிக்கு காரணம் ஒரே ஒரு அமைப்பு மட்டுமே" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை சுட்டிக் காட்டி இருக்கிறார் இம்ரான் கான்.