கராச்சி: இந்திய அளவில் நடைபெற்று வரும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் ட்ராபி தொடரில் 19 வயது இளம் வீரர் முஷீர் கான் சதம் அடித்து மொத்தம் 181 ரன்கள் குவித்து இருந்தார். அந்த சதம் பாகிஸ்தான் நாட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிக மோசமான சரிவை சந்தித்து வரும் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு சம்பந்தமே இல்லாமல் சாம்பியன் ஒருநாள் கோப்பை என்ற உள்ளூர் ஒருநாள் தொடரை நடத்த உள்ளது.
அது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் கடுமையாக பேசியிருக்கிறார். இந்தியாவில் துலீப் ட்ராபி தொடரில் 19 வயது வீரர் முஷீர் கான் 181 ரன்கள் குவித்ததை சுட்டிக்காட்டி இருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் அதிகாரிகளை ஒரு அறையில் அடைத்து வைத்து முஷீர் கான் சதம் அடித்த வீடியோவை பார்க்க வைக்க வேண்டும் என கம்ரான் அக்மல் பேசி இருக்கிறார். இந்தியாவைப் போல உள்ளூர் அளவிலான டெஸ்ட் தொடர்களை அதிக அளவில் நடத்த வேண்டும். ஆனால், பாகிஸ்தானில் உள்ளூர் ஒருநாள் தொடர்களை நடத்தி வருகிறார்கள் என கம்ரான் அக்மல் பொங்கி இருக்கிறார்.

பாகிஸ்தான் அணி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. வங்கதேச அணி இது வரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற்று இருக்காத நிலையில், தற்போது பாகிஸ்தான் மண்ணிலேயே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என வெற்றி பெற்று முதன்முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரையும் வென்று இருக்கிறது.
இதன் மூலம் வரலாற்றிலேயே மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது பாகிஸ்தான் அணி. அது குறித்து கம்ரான் அக்மலிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். "நாம் ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் எட்டாவது இடத்திற்கு சரிந்து இருக்கிறோம். நாம் இங்கு டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடவில்லை. வங்கதேச அணிக்கு எதிராக தோற்றுவிட்டோம் என அழுது கொண்டிருக்கிறோம். ஆனால், மறுபுறம் சாம்பியன்ஸ் ஒருநாள் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இது சரியான நேரம் தானா?" என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த கம்ரான் அக்மல், "எனது பார்வையில் சாம்பியன்ஸ் ஒரு நாள் கோப்பையால் நேரம் மற்றும் பணம் வீணாகும். இந்த முடிவு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த ஏற்படுத்தும். இந்த விளையாட்டின் மீதான ஆர்வத்தை குறைக்கும். பல இளம் கிரிக்கெட் வீரர்களின் எண்ணத்தை இது சிதைக்கும். இன்று இந்தியாவின் முஷீர் கான் 181 ரன்கள் குவித்து இருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் அதிகாரிகளை ஒரு அறையில் அடைத்து வைத்து முஷீர் கான் ஆடிய இன்னிங்சை பார்க்க வைக்க வேண்டும். அதன் மூலம் எப்படி வீரர்களை உருவாக்க வேண்டும் என நாம் அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். சாம்பியன்ஸ் கோப்பை போன்ற யோசனைகளை மாற்ற இதுதான் ஒரே வழி." என கூறி இருக்கிறார்.