ராவல்பிண்டி: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும், அதற்கு முன் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலும் பாகிஸ்தான் அணி மோசமான தோல்விகளை சந்தித்த நிலையில், அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மத நம்பிக்கைகளில் அதிக நேரத்தை செலவிட்டதாக தற்போது ஒரு வீடியோ பரவி வருகிறது.
அதிலும் குறிப்பாக ஒவ்வொரு போட்டியின் போதும் பாகிஸ்தான் அணியினர் தங்கி இருந்த ஹோட்டல்களில் வீரர்கள் வழிபாடு செய்ய தனி அறையை தயார் செய்து, முஸ்லிம் அல்லாதவர்கள் அந்த அறையில் நுழையாமல் பார்த்துக் கொண்டதாக சக வீரர் இமாம் உல் ஹக் அந்த வீடியோவில் கூறி இருப்பது சர்ச்சையாக மாறி உள்ளது.

இது பற்றி பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் இமாம் உல் ஹக் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பேட்டியில் "பாகிஸ்தான் அணியின் தலைமை எப்படி உள்ளது?" என்ற கேள்விக்கு, "ஒவ்வொருவரும் இங்கே தலைமைப் பொறுப்பை ஏற்க போட்டி போடுகிறார்கள்" என்று சொன்ன அவர், ஆனால் முகமது ரிஸ்வான் சிறப்பாக செயல்படுவதாக சுட்டிக்காட்டி இருந்தார்.
முகமது ரிஸ்வான் எந்த வகையில் சிறப்பாக செயல்படுகிறார் என இமாம் உல் ஹக் சொன்ன காரணம்தான் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. முகமது ரிஸ்வான் கேப்டனாக இருக்கும் நிலையில், அவர் பாகிஸ்தான் வீரர்கள் தங்கும் ஹோட்டலில் எந்த அறையில் நமாஸ் வழிபாடு செய்வது என்பதை தேர்வு செய்கிறார். அனைவரையும் நமாஸ் செய்வதற்கு ஒருங்கிணைக்கிறார். இதற்காக வாட்சப் குழு ஒன்றை அமைத்து, எத்தனை மணிக்கு நமாஸ் செய்ய வேண்டும் என வீரர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
மேலும் அந்த இடத்தில் அனைவருக்கும் விரிப்பை விரித்து வைக்கிறார். முஸ்லிம் அல்லாதவர்கள் அந்த அறைக்கு செல்லாமல் பார்த்துக் கொள்கிறார் என இமாம் உல் ஹக் கூறி இருந்தார். இதை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் அணி கேப்டன், அணியின் பயிற்சி மற்றும் திட்டங்களுக்கு செலவிட்ட நேரத்தை விட இது போன்ற விஷயங்களுக்கு அதிக நேரத்தை செலவிட்டு இருக்கிறார் என தற்போது விமர்சனம் எழுந்துள்ளது.
அது மட்டுமின்றி முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குறிப்பிட்ட அறையில் அனுமதி மறுத்ததாக கூறப்பட்டு இருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அது சரியா, தவறா என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது.
இந்திய அணிக்கு எதிரான போட்டியின் போது, முகமது ரிஸ்வான் இஸ்லாம் முறைப்படி வெற்றிக்காக இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டு இருந்தார். அந்த காட்சி நேரலையிலும் ஒளிபரப்பானது. அது பற்றி சுரேஷ் ரெய்னா தெரிவித்த கருத்து அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்திருப்பதால் இந்த விவகாரம் சர்ச்சையாக மாறியுள்ளது.