ராவல்பிண்டி: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் வெல்வது இதுவே முதல்முறையாகும். அதுமட்டுமல்லாமல் சொந்த மண்ணிலேயே 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் தோற்றுள்ளது.
ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியது. அப்போதே ரசிகர்கள் பலரும் பாகிஸ்தான் அணியில் உள்ள சீனியர் வீரர்களை நீக்க வேண்டும் என்று கொந்தளித்தனர். ஆனால் பிசிபி பெரிதாக நடவடிக்கை எடுக்காத சூழலில், டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை சந்திப்பது கடுமையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தோல்வி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் மோஷின் நக்வி பேசுகையில், பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் குறித்த எந்த டேட்டாவும் பாகிஸ்தான் தேர்வு குழுவினரிடம் இல்லை என்பதே முதல் பிரச்சனை. டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் பிரச்சனைகளை ஆய்வு செய்து உடனே சரி செய்ய வேண்டும் என்று பேசியிருந்தேன்.
அதனை சரி செய்ய முயன்ற போது தான், நம்மிடம் எந்த டேட்டாவும் இல்லை என்பது தெரிய வந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒட்டுமொத்த அமைப்பும் சிக்கலில் இருப்பதை புரிந்து கொண்டேன். பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நிச்சயம் புதிய திறமைகளை உருவாக்கும் என்று நம்புகிறேன். அதில் ஒவ்வொரு வீரர் குறித்த பிரத்யேக டேட்டாவை தயாரிக்கவுள்ளோம்.
சில நேரங்களில் பிரச்சனைகளை சரி செய்வதற்கு பதில் இருந்தால் மட்டும் போதாது. பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் குறித்த போதுமான தகவல்களே இல்லை. அவர்களின் திறமை, ரன்கள் குறித்த டேட்டா கூட இல்லை. சாம்பியன்ஸ் கோப்பை மூலமாக நிச்சயம் உள்ளூர் கிரிக்கெட் வலிமை பெறும் என்று நம்பிக்கை உள்ளது. அதன் மூலமாக சுமார் 150 வீரர்கள் வாய்ப்பு பெறுவார்கள்.
அதில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கு கொண்டு வரப்படுவார்கள். ரசிகர்கள் எதிர்பார்ப்பதை போல், ஒரே நாளில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது. அப்படி சில முடிவுகளை எடுத்தால், அவர்கள் தான் முதலில் விமர்சிப்பார்கள். ஒருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக இன்னொரு வீரரை தூக்கியெறியக் கூடாது.
அதேபோல் இந்த 150 வீரர்களின் தேர்வில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) டெக்னாலஜியின் பங்கு 80 சதவிகிதமாகும். மீதமுள்ள 20 சதவிகித பணிகளை தான் தேர்வு குழுவில் உள்ள உறுப்பினர்கள் செய்துள்ளனர். தேர்வுக் குழுவினர் பணியை யாராலும் செய்துவிட முடியாது. பாகிஸ்தான் அணியில் உள்ள வீரர்களை நீக்கிவிட்டு இன்னும் மோசமாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்கிவிட கூடாது என்பதிலும் கவனமாக உள்ளோம்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் செப்டம்பர் மாத முடியும். அப்போது சரியான டேட்டாவுடன் சரியான மாற்றங்களை செய்வோம் என்று தெரிவித்துள்ளார். வழக்கமாக கிரிக்கெட் வாரியங்களில் ஏராளமான அனலிஸ்ட்கள் இருப்பார்கள். என்சிஏவில் அதற்காகவே பிரத்யேக படிப்புகள் உள்ளன. அனைத்து அணிகளின் தேர்வும் அனலிஸ்ட்கள், பயிற்சியாளர்கள், கிரிக்கெட் வாரியம் தலையிட்டே தேர்வு செய்யப்படும்.
ஆனால் பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்களின் தேர்வு கூட ஏஐ மூலமாக நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாகிஸ்தான் வாரியத்தில் உள்ள நிர்வாகிகளின் சோம்பேறித்தனம் வெளிப்படையாக தெரிவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அனலிஸ்ட்கள் ஏஐ பயன்படுத்தி சில டேட்டாக்களை பெறுவதில் தவறில்லை.
ஆனால் ஒரு வீரரின் திறமையை எப்படி ஏஐ மூலமக கண்டறிய முடியும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக எழுந்துள்ளது. ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டை கலக்கி வரும் ஷமார் ஜோசப்பை பார்த்து 2 நிமிடங்களில் அனலிஸ்ட் பிரசன்னா ஒப்பந்தம் செய்திருந்தார். என்னதான் டெக்னாலஜி முன்னேறி இருந்தாலும், மனிதர்களின் திறமையை ஏஐ-யால் சரியாக கணிக்க முடியுமா என்பதே கேள்வியாக உள்ளது.