ராவல்பிண்டி: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் டிக்ளர் செய்த பின்னும் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றிலேயே எந்த அணியும் செய்யாத மோசமான சாதனை ஒன்றை செய்துள்ளது.
ஒரே மைதானத்தில் விளையாடிய அடுத்தடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கும் மேல் எடுத்த பின்னரும், அந்த போட்டியில் தோல்வியை சந்தித்து இருக்கிறது பாகிஸ்தான் அணி. வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், இதே மைதானத்தில் நடந்த முந்தைய டெஸ்ட் போட்டியிலும் இதே போல தோல்வி அடைந்தது.

இதற்கு முன் 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்று ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 579 ரன்கள் குவித்தது. அப்போது பாகிஸ்தான அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக பந்து வீசி வெற்றி பெற்றது.
அதேபோன்ற ஒரு விஷயம் தான் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் 448 ரன்கள் எடுத்தவுடன் பாகிஸ்தான் அணி டிக்ளர் செய்தது. பேட்டிங் பிட்ச்சில் 448 ரன்கள் போதுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 565 ரன்கள் குவித்து அதிர்ச்சி அளித்தது. பின்னர் ஐந்தாம் நாள் மட்டுமே மீதமிருந்த நிலையில் போட்டி டிரா ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. 30 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் வங்கதேச அணி விக்கெட் இழக்காமல் அந்த சிறிய இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தோல்வியையும் சேர்த்து கடந்த 1294 நாட்களாக பாகிஸ்தான் அணி தங்களின் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி தங்களின் சொந்த மண்ணில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஒரு வெற்றி கூட பெறவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தங்களின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் ஆடிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் இருந்தது. வங்கதேச அணி இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக வென்றதில்லை என்பதால் பாகிஸ்தான் அணி இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு வெற்றிகளை பெற்று வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்யும் என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் தோல்வி அடைந்திருக்கிறது.