ராவல்பிண்டி: வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 271 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் பாபர் அசாம் 31 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அவர் கடைசியாக விளையாடிய 15 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் ஆட்டமிழந்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி புதிய சாதனை படைத்தது. இதனால் பாகிஸ்தான் அணி மீது ஏராளமான விமர்சனங்கள் அதிகரித்தன.

பாகிஸ்தான் அணி உள்நாட்டிலேயே தோல்வியடைந்ததால், அந்த அணி வீரர்களை மொத்தமாக பிளேயிங் லெவனில் இருந்து நீக்க வேண்டும் என்று கொந்தளித்தனர். இந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தொடங்கியது.
இதில் முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் வந்த சயீம் அயூப் மற்றும் கேப்டன் மசூத் இருவரும் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கேப்டன் மசூத் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அயூப் 58 ரன்கள் எடுத்து வெளியேறினர். பின்னர் வந்த சாவுத் சக்கீல் 16 ரன்களிலும், பாபர் அசாம் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த ஆகா சல்மான் 54 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடிய நிலையில், மற்ற வீரர்கள் டெய்லண்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 274 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. வங்கதேசம் அணி தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளையும், டஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதில் பாபர் அசாமின் பேட்டிங் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் விமர்சனத்தை பெற்று வருகிறது. 77 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்த போது, ஷகிப் பவுலிங்கில் சாதாரணமாக ஆட்டமிழந்து வெளியேறினார். அதேபோல் பாபர் அசாம் கடைசியாக விளையாடிய 15 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
அதேபோல் கடந்த 15 இன்னிங்ஸ்களில் மொத்தமாகவே 320 ரன்கள் மட்டுமே பாபர் அசாம் சேர்த்திருக்கிறார். அதிலும் அதிகபட்சமாக அவர் சேர்த்த ரன்கள் வெறும் 41 ரன்கள் தான். இதனால் 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாபர் அசாம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபார்மில்லாமல் தடுமாறி வருவதாக விமர்சிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு வரை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பாபர் அசாமை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியுடன் ஒப்பிட்டு கொண்டாடி வந்தனர். ஆனால் விராட் கோலி சாதித்ததில் பாதியை கூட எட்ட முடியாமல் பாபர் அசாம் தடுமாறி வருவது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் விரைவில் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.