துபாய்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது. இதனால் செப்டம்பர் 28ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன.
ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான வாழ்வா சாவா போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த நிலையில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் ஜேப்டன் ஜேக்கர் அலி பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதன்பின் 136 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. ஷாகின் அப்ரிடி வீசிய முதல் ஓவரில் பர்வேஸ் ஹொசைன் டக் அவுட்டாகி வெளியேறினார். இதையடுத்து அதிரடியாக ஆடிய சைஃப் ஹசன் பவுண்டரியும், சிக்சருமாய் விளாசி தள்ளினார். ஆனால் மறுமுனையில் நின்றிருந்த ஹிர்டாய் 10 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
பின்னர் ஹாரிஸ் ராஃப் பந்தில் சைஃப் ஹசனும் 18 ரன்களில் வெளியேற, பாகிஸ்தான் அணி வீரர்கள் உத்வேகம் அடைந்தனர். இதனால் 6 ஓவர்களில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்களை சேர்த்திருந்தது. தொடர்ந்து ஸ்பின்னர்களான அப்ரார் அஹ்மத் மற்றும் முகமது நவாஸ் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டனர். அதற்கு உடனடியாக பலன் கிடைத்தது.
அனுபவ வீரரான மெஹதி ஹசன் 11 ரன்களில் ஆட்டமிழக்க, வங்கதேச அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 58 ரன்களை சேர்த்தது. இதையடுத்து நிதானமாக ஆடிய நுருல் ஹசன் 16 ரன்களில் வெளியேற, பாகிஸ்தான் அணியின் ஆதிக்கம் தொடங்கியது. அதற்கேற்ப வங்கதேச பேட்ஸ்மேன்களும் அதிக டாட் பால்களை ஆட தொடங்கினர்.
இதனால் அழுத்தம் அதிகரிக்க கேப்டன் ஜேக்கர் அலி அதிரடியாக விளையாட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். இருந்தாலும் ஷமிம் ஒருபக்கம் போராட, வங்கதேச அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 46 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷாகின் அப்ரிடி பந்தில் ரிவர்ஸ் ஹிட் அடிக்க முயன்று ஷமீம் ஹொசைனும் 30 ரன்களில் வெளியேறினார்.
பின் ஹாரிஸ் ராஃப் பந்தில் தன்சிம் 10 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து டஸ்கின் அஹ்மத் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் வங்கதேச அணி 101 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. இறுதியாக வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. இதன் மூலமாக பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் மூலமாக செப்டம்பர் 28ஆம் தேதி நடக்க உள்ள ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளனர்.