ராவல்பிண்டி: பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி படுமோசமான தோல்வியை சந்தித்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணியால் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியை சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா. குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி எப்போது தோல்வி அடைந்ததோ. அப்போதிலிருந்து தான் அந்த அணியின் வீழ்ச்சி தொடங்கியதாக அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசுகையில், "வங்கதேச டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் அணித் தேர்வு தான். அணியில் ஒரு ஸ்பின்னர் கூட இல்லாமல் ஆடி இருக்கிறீர்கள். அடுத்து பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் மீதான மதிப்பு முடிந்துவிட்டது. இந்த பிரச்சனை ஆசிய கோப்பையில் இந்தியா நமது வேகப் பந்துவீச்சாளர்களை அடித்து ஆடியதில் இருந்து தொடங்கியது. அப்போது இந்த உலகம் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சின் ரகசியத்தை தெரிந்து கொண்டது. இவர்களை அடித்து ஆடுவது தான் சரியான வழி என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர். நமது பந்துவீச்சாளர்களின் வேகம் அப்போது இருந்து குறைந்தது. அவர்களின் திறமையும் குறைந்துவிட்டது." என்றார்.
மேலும், "வங்கதேச வேகப் பந்துவீச்சாளர்கள் தாக்குதல் பாணியில் பந்து வீசினார்கள். ஆனால், நமது பந்து வீச்சாளர்கள் "அரவுண்ட் தி விக்கெட்டில்" பந்து வீசி நாடகம் ஆடினார்கள். பாகிஸ்தான் அணியில் முற்றிலுமான அதிக வேகத்தில் வீசும் பந்து வீச்சாளர் இல்லாத நிலையில் வங்கதேசம் நமது வேகப் பந்துவீச்சாளர்களை விட கூடுதல் வேகத்தில், 125 முதல் 135 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார்கள்." என்றார்.
"பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் தோல்விப் பாதையில் இருக்கிறார். இதற்கு முன் நடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கடினமான சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது என்று நான் நினைத்தேன். ஆனால், இப்போது பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் அணியால் தொடரை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வங்கதேச அணி போன்ற ஒரு சிறிய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் பாகிஸ்தான் தோல்வி அடைந்து இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நீங்கள் சூழ்நிலையை சரியாக புரிந்து கொள்ளாதது தான்." என்றார் ரமீஸ் ராஜா.
மேலும், "ஷான் மசூத் தனது பேட்டிங்கை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். இந்த விளையாட்டு குறித்த அறிவு இருப்பதாக வெளி உலகத்திற்கு காட்டிக் கொள்ள வேண்டும். அவர் அனுபவ கேப்டன். பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் உள்ளூர் போட்டிகளில் அணிகளை சிறப்பாக வழி நடத்தி இருக்கிறார். ஆனால், எதன் அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்தில் ராவல்பிண்டி பிட்ச்சில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை அவர் தேர்வு செய்தார் என்று எனக்கு தெரியவில்லை." என்றார் ரமீஸ் ராஜா.