வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட் செய்யப்பட்டார். வங்கதேச சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் மிராஸின் இந்த செயல், சர்ச்சையை ஏற்டுத்தியது. இதனால், சல்மான் அகா கடும் கோபத்திற்கு ஆளானார்.
முதல் இன்னிங்ஸின் 39-வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. அப்போது பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்களுடன் வலுவாக இருந்தது. சல்மான் அகாவும், முகமது ரிஸ்வானும் நான்காவது விக்கெட்டுக்கு 115 பந்துகளில் 109 ரன்கள் குவித்து நிலையான பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

ரிஸ்வான், மிராஸ் வீசிய பந்தை நேராக அடித்தார். பந்தை பிடிப்பதற்காக மிராஸ், கிரீஸுக்குள் திரும்பிக் கொண்டிருந்த அகாவுக்கு முன்னால் வந்தார். அகாவும் பந்தை எடுக்க உதவ முயன்றார். ஆனால் மிராஸ் தரையிலிருந்த பந்தை எடுத்து ஸ்டம்புகளை நோக்கி எறிந்தார். அப்போது கிரீஸுக்கு வெளியே நின்றிருந்த அகா ரன் அவுட் செய்யப்பட்டார்.

கள நடுவர் தன்வீர் அஹமது இந்த முடிவை மூன்றாவது நடுவரிடம் பரிந்துரைத்தார். அகா கிரீஸுக்கு வெளியே இருந்ததால், அவருக்கு அவுட் வழங்கினார். இந்த முடிவால் கடும் கோபமடைந்த சல்மான் அகா, தனது கையுறை மற்றும் ஹெல்மெட்டை ஆத்திரத்துடன் எறிந்து, கோபத்தில் களத்தை விட்டு வெளியேறினார்.
இது கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சர்ச்சைக்குரிய ரன் அவுட்டாக மாறியுள்ளது. இது 'விளையாட்டின் நேர்மை’ மற்றும் அதன் விதிகள் இரண்டையும் கேள்விக் குறியாக்கியுள்ளது. பந்து டேட் பாலாக மாறவில்லை என்பதால், இந்த ரன் அவுட் விதிகளுக்குட்பட்டது தான். ஆனால், பந்தை எடுத்து தர உதவிய போது, வங்கதேச பவுலர் இப்படி செய்தது நியாயமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசியின் விதி 41.5, பந்தை அடித்த பிறகு, எந்த பீல்டரும் பேட்ஸ்மேனை திசைதிருப்பவோ, ஏமாற்றவோ அல்லது தடுக்கவோ வேண்டுமென்றே வார்த்தையாலோ அல்லது செயலாலோ முயற்சிப்பது தவறு எனக் குறிப்பிடுகிறது.
இந்தச் சூழ்நிலையில், மிராஸ் வேண்டுமென்றே சல்மான் அகாவைத் தடுத்தார் அல்லது ஏமாற்றினார் என நடுவர் கருதியிருந்தால், விதி 41.5 பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பந்தை மடக்குவது மட்டுமின்றி, தனது கிரீஸுக்கு அகா திரும்புவதைத் தடுக்கவே மிராஸ் தனது பாதையை மாற்றினார் என நடுவர் தீர்மானித்திருந்தால் இந்த விதி செயல்படுத்தப்பட்டிருக்கும்.

அகா விக்கெட்டுக்குப் பிறகு பாகிஸ்தான் உடனடியாக சரிந்தது. இரண்டு பந்துகளுக்குப் பிறகு ரிஸ்வானும் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 48 ஓவர்களுக்கும் குறைவாகவே விளையாடி 274 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்பு, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய வங்கதேச அணி 114 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1க்கு1 என சமனில் உள்ளது. 3வது போட்டி வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ளது.