கராச்சி: பாகிஸ்தான் அணியின் சறுக்கல் கவலையளிப்பதாக கூறிய இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முன்னாள் வீரர் சேஷாத் அஹ்மத் பதில் அளித்துள்ளார். பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளதால், இனி எத்தனை திறமை வாய்ந்த வீரர்கள் வரப் போகிறார்கள் என்று சர்காஸ்டிக் பதிலை அளித்திருக்கிறார்.
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி இழந்திருக்கிறது. சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் 3 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் ஒரு டெஸ்டை கூட வெல்லாமல் இருப்பதும் பேசுபொருளாகியுள்ளது.

ஹோம் சீசனில் விளையாடியுள்ள 10 போட்டிகளில் பாகிஸ்தான் அணி 6 டிரா, 4 தோல்வியுடன் உள்ளது. இதுகுறித்து இந்திய சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், இந்த தோல்வியை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு 10 ஆண்டுகளுக்கு முன் சென்று பார்த்தால், யூனுஸ் கான், மிஸ்பா உல் ஹக் என்று தரமான வீரர்கள் இருந்துள்ளனர். பாகிஸ்தான் அல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடிய போது கூட, பாகிஸ்தானை வீழ்த்துவது எளிதான விஷயமாக இருக்காது என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சேஷாத் அஹ்மத் சர்காஸ்டிக்காக பதில் அளித்துள்ளார். அதில், பாகிஸ்தான் கிரிக்கெட்டை நினைத்து ஏன் ஆச்சரியமடைகிறீர்கள் அஸ்வின்? நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால் பாகிஸ்தானில் எல்லாம் சரியாகவே உள்ளது. பாகிஸ்தானில் கட்டப்பட்டு வரும் மைதானத்தில் பார்க்கவில்லையா? தொடர்ச்சியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒருங்கிணைத்துள்ள உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சாம்பியன்ஸ் ஒருநாள் கோப்பையை பார்க்கவில்லையா? அந்த தொடர் முடிவடைந்த பின் எத்தனை திறமையான வீரர்கள் வருவார்கள் என்று எண்ணிப் பார்க்க தயாராகுங்கள்.. எப்படி வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்குகிறோம் என்பதை கற்றுக் கொள்ள தயாராக இருங்கள்.. இதனையெல்லாம் பார்க்கலாம் ஏன் ஆச்சரியம் கொள்கிறீர்கள்.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு கூட தகுதிபெறவில்லை என்றால் என்ன? பாகிஸ்தான் அணிக்குள் ஒற்றுமை இல்லாமல் குரூப் சேர்ந்து கொண்டு அரசியல் செய்தால் என்ன? பாகிஸ்தான் அணியில் உள்ள வீரர்கள் மோசமாக விளையாடினால் என்ன? இதெல்லாம் ஒரு பிரச்சனையா ரவிச்சந்திரன் அஸ்வின்.. இதற்கெல்லாம் கவலைப்பட தேவையில்லை.. என்று பதில் அளித்துள்ளார்.