ராவல்பிண்டி: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி படுமோசமாக ஆடி வருகிறது. அந்த அணியின் கேப்டன் ஷான் மசூத் எடுத்த சில மோசமான முடிவுகள் மற்றும் வேகப் பந்துவீச்சாளர்களின் சுமாரான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி சிக்கலில் இருக்கிறது.
இந்த நிலையில் முன்னாள் வீரார் தன்வீர் அகமது பாகிஸ்தான் அணியை விளாசி இருக்கிறார். குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர்கள் 35 வயது ஆனவர்கள் போல பந்து வீசுவதாகவும், கேப்டன் ஷான் மசூத்தை யாருமே குற்றம் சுமத்தவில்லை எனவும் கூறி இருக்கிறார்.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்டம் மழையால் பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. அதன் பின் பாகிஸ்தாம் அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது கேப்டன் ஷான் மசூத் டிக்ளர் செய்வதாக அறிவித்தார்.
ஆனால், அடுத்து ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்க்ஸில் 565 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் பாகிஸ்தான அணி அவசரப்பட்டு டிக்ளர் செய்ததை பலரும் விமர்சித்து வருகின்றனர். அடுத்து கடைசி நாளன்று இரண்டாவது இன்னிங்சில் ஆடிய பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட் இழந்து மோசமான நிலைக்கு சென்றது.
இந்த மோசமான செயல்பாட்டை பார்த்த தன்வீர் அகமது, தனது சமூக வலைதள பக்கத்தில் பாகிஸ்தான் அணியை விளாசி இருக்கிறார். பலரும் பாகிஸ்தான அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக செயல்படவில்லை என்கிறார்கள். ஆனால், கேப்டன் ஷான் மசூத் மோசமாக முடிவுகளை எடுத்தார் என்பதை சொல்ல மறந்து விட்டார்கள் என அவர் ஒரு பதிவில் கூறி இருக்கிறார்.
மற்றொரு பதிவில், "நஸீம் ஷா வயது 21, ஷஹீன் ஷா அப்ரிடி வயது 24, குர்ராம் சாஷாத் வயது 24. ஆனால், இவர்கள் மூவரும் 35 வயதானவர்கள் போல பந்து வீசி வருகிறார்கள்." என கூறி இருக்கிறார். அவர்கள் மூவரும் அதிக வேகத்தில் பந்து வீசவில்லை என்பதையே அவர் இவ்வாறு சுட்டிக் காட்டி இருக்கிறார்.