மும்பை: பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் குறித்து இந்திய கிரிக்கெட் அம்பயர் அனில் சவுத்ரி கிண்டல் செய்து பேசி இருக்கிறார். முகமது ரிஸ்வான் அவுட் கேட்கும் முறை குறித்து புறா குதிப்பது போல குதிப்பார் என அவர் விமர்சித்து இருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருக்கிறார் முகமது ரிஸ்வான். பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராகவும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதே சமயம், அவர் ஆடுகளத்தில் வேடிக்கையான சில விஷயங்களை செய்வார். 2023 உலகக் கோப்பை தொடரில் அவர் தனக்கு காயம் ஏற்படாத போதும் காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது போல நடித்தார்.

அதேபோல. விக்கெட் கீப்பிங் செய்யும் போதும் சில விஷயங்களை செய்வார். குறிப்பாக, அடிக்கடி அம்பயரிடம் அவுட் கேட்டுக் கொண்டே இருப்பார். அது அவுட் இல்லை என்று தெரிந்தாலும், வேண்டுமென்றே சத்தம் போட்டு அவுட் கேட்டுக் கொண்டே இருப்பார். அது குறித்து ஒரு பேட்டியில் பேசிய அம்பயர் அனில் சவுத்ரி, "முகமது ரிஸ்வான் அடிக்கடி அவுட் கேட்டுக் கொண்டே இருப்பார். எனது சக அம்பயரிடம் கூட இவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று நான் எச்சரித்து இருக்கிறேன். ஒவ்வொரு பந்துக்கும் அவர் கத்திக்கொண்டே இருப்பார்." என்றார்.
மேலும், "இவர் தானே உதட்டில் ஏதோ ஒன்றை லிப்ஸ்டிக் போல பூசிக்கொண்டு இருப்பவர்? புறாவைப் போல குதித்துக் கொண்டே இருப்பார். ஒரு நல்ல அம்பயருக்கு நல்ல விக்கெட் கீப்பர் யார் என்பது தெரியும். அம்பயர் நன்றாக செயல்பட்டால் இந்த விக்கெட் கீப்பர்கள் தங்கள் முயற்சியில் தோல்வி அடைவார்கள். இன்று இவ்வளவு தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட பின்பும் ஒவ்வொரு முறையும் அவுட் கேட்டு ஏன் உங்களை நீங்களே மோசமாக காட்டிக் கொள்கிறீர்கள்? மக்கள் இதுபோன்ற விஷயங்களை வைத்து உங்களை கேலி செய்வார்கள்." என்று அனில் சவுத்ரி கூறி இருக்கிறார்.
அனில் சவுத்ரி முகமது ரிஸ்வானை பார்த்து லிப்ஸ்டிக் பூசிக் கொள்பவர், புறாவை போல குதிப்பவர் என கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஒரு அம்பயரே ஒரு வீரரை கிண்டல் செய்து இருக்கிறார் என முகமது ரிஸ்வானை சுட்டிக்காட்டி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.