ராவல்பிண்டி: பாகிஸ்தான் - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 448 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய வங்கதேச அணி 565 ரன்கள் குவித்து ஆல் அவுட்டாகியது.
இதன் மூலம் 2வது இன்னிங்ஸில் வங்கதேசம் அணி 117 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 5வது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. பாகிஸ்தான் அணியின் 4 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினால், வங்கதேசம் அணி வெற்றிபெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே 4வது நாள் ஆட்ட முடிவடைந்த பின் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா பேசுகையில், ஓராண்டுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதால், என்னுடைய பவுலிங் ரிதமை பிடிக்கவே நேரம் எடுத்துவிட்டது. தற்போது வானிலை அதிகளவிலான வெப்பமாக இருப்பதால, நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பிட்சில் இருந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவி கிடைக்கவில்லை.
வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவி செய்யக் கூடிய வகையிலான பிட்ச்களை தயார் செய்ய முடியவில்லை என்றால், ஸ்பின்னர்களுக்கு சாதகமான பிட்ச்களையாவது உருவாக்க வேண்டும். ஏனென்றால் சொந்த மண்ணில் விளையாடும் போது எந்தவொரு சாதகமும் இல்லாமல் இருக்க கூடாது. இவ்வளவு வெப்பத்திலும் கூட மக்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க வருகிறார்கள்.
அவர்களுக்கு தேவையான பொழுதுபோக்கை அளிக்க வேண்டும். இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் கொஞ்சம் தீவிரமாக அணுக வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவி கிடைக்கும் என்றே நினைத்திருந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை போல் நடக்கவில்லை.
4 வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும் போது, வேகமான பந்துகளை வீசி விக்கெட்டை வீழ்த்துவதே நோக்கமாக இருக்கும். வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமல்லாமல் ஸ்பின்னர்களுக்கும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஏனென்றால் பிட்சில் புற்கள் இருக்கிறது. அதிலும் இருந்து பவுலர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.