நியூயார்க் : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்திருக்கிறார். பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக இருக்கும் ரிஸ்வான் அந்த அணியின் முக்கிய தூணாக இருக்கிறார்.
ரிஸ்வானும், பாபர் அசாமும் சொதப்பினால் அன்றைய நாளில் பாகிஸ்தான் தோல்வியை தழுவுவது என்பது 100 சதவீதம் கேரன்டி ஆகும். இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவிய நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் எஞ்சிய இரண்டு போட்டிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் இருந்தது.

இந்த நிலையில் கனடா அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் கனடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. இதன் அடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது.
இதில் வழக்கம் போல் ரிஸ்வானும் பாபர் அசாமும் தான் ஜோடி சேர்ந்து பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர். கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்ற ரிஸ்வான் 53 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் சேரும். ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு இந்த இன்னிங்ஸ் சிறப்பானதாகும். ஆனால் டி20க்கு இது மிகவும் குறைவான ஸ்டிரைக் ரேட் ஆகும்.
இந்த நிலையில் முஹமது ரிஸ்வான் அரை சதம் அடித்ததன் மூலம் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்து இருக்கிறார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் அடித்த தொடக்க வீரர் என்ற பெருமையை தற்போது ரிஸ்வான் படைத்திருக்கிறார். ரிஸ்வான் 71 இன்னிங்ஸில் 30 முறை அரைச்சதம் அடித்திருக்கிறார்.ஆனால் ரோகித் சர்மா 118 இன்னிங்ஸில் 30 முறை அரைசதம் அடித்து உள்ளார்.
எனினும் ரிஸ்வானை விட ரோகித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் தான் அதிகமாக இருக்கும். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் பாபர் அசாம் 28 முறை அரை சதம் அடித்து இருக்கிறார். இதேபோன்று டேவிட் வார்னர் 27 முறை அரைசதம் அடித்து நான்காம் இடத்தில் உள்ளார். ரிஸ்வான் இதுவரை 100 டி20 போட்டிகளில் விளையாடி 3,243 ரன்கள் அடித்திருக்கிறார். அவருடைய ஸ்ட்ரைட் 127 என்ற அளவில் தான் இருக்கின்றது.