நியூயார்க்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் மோசமான ஃபீல்டிங்கை பார்த்து இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி கை கொட்டி சிரிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
2024 டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடந்த ஜூன் 9ஆம் தேதி அன்று நியூயார்க் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. இந்திய அணி 19 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்தப் போட்டியில் இந்திய அணியின் பின்வரிசை வீரர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் பேட்டிங் செய்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒற்றை ரன்களாக ஓடி ரன் சேர்த்தனர். அப்போது ஷஹீன் ஷா அப்ரிடி 19 வது ஓவரை வீசினார். முகமது சிராஜ் அந்த ஓவரின் மூன்றாவது பந்தை அருகே தட்டி விட்டு ஒரு ரன் ஓட முயன்றார். அப்போது பாகிஸ்தான் ஃபீல்டர் ஒருவர் பந்தை எடுத்து எதிர்முனையை நோக்கி வேகமாக வீசினார்.
ஆனால், யாருமே பந்தை பிடிக்காததால் சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் மீண்டும் ஒரு ரன் ஓடினர். அப்போது பந்தை எடுத்து மீண்டும் ரன் அவுட் செய்ய முயற்சி செய்து அதில் தோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் ஃபீல்டர்கள் பந்தை எடுத்து ரன் அவுட் செய்யத் தடுமாறியதை பார்த்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குலுங்கி குலுங்கி சிரித்தனர். விராட் கோலி கைதட்டி சிரித்ததுடன் கைகளை வாயில் வைத்து பொத்திக்கொண்டு அடக்க முடியாமல் சிரித்தார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. பலரும் இதை வைத்து பாகிஸ்தான் அணியை கிண்டல் செய்து வருகின்றனர். இத்தனைக்கும் இந்திய அணி மோசமான நிலையில் இருந்த போதும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பாகிஸ்தான் ஃபீல்டிங்கை பார்த்து சிரித்ததை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி கேசிங் செய்தபோது 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.