முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாமை, சக வீரரான ஷாகின் அப்ரிடி களத்திலேயே நக்கல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொந்தளித்து வருகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்த போது, பவுலிங்கில் பாகிஸ்தான் அணி சொதப்பியது. இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 823 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ஹாரி ப்ரூக் முச்சதம் விளாசி சாதனை படைத்தார்.

இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வெறும் 220 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்துள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் பாபர் அசாம் இம்முறையும் ஏமாற்றினார். இதன் மூலமாக தொடர்ச்சியாக 17 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் பாபர் அசாம் விளையாடி வருவது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் பாகிஸ்தான் அணியில் வீரர்கள் பலரும் தனித்தனி குழுக்களாக செயல்பட்டு வருவதும் மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. ஓய்வறையில் பாகிஸ்தான் வீரர்கள் மோதி கொண்டிருந்த நிலையில், தற்போது களத்திலேயே மோத தொடங்கியுள்ளனர். இங்கிலாந்து அணியின் பேட்டிங்கின் போது 98வது ஓவரை வீசுவதற்காக ஷாகின் அப்ரிடி அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரை வீசி முடித்த ஷாகின் அப்ரிடி, அருகில் நின்றிருந்த பாபர் அசாமை பார்த்து, "ஜிம்பு... ஜிம்பு.. ஜிம்பு" என்று வாயை மூடிக் கொண்டே கத்தி வம்புக்கு இழுத்துள்ளார். ஏற்கனவே பாபர் அசாம் - ஷாகின் அப்ரிடி இடையில் கேப்டன்சி விவகாரத்தில் மோதல் இருந்து வருகிறது. அந்த மோதல் களத்திலேயே வெளிப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் வென்று 1,342 நாட்களை எட்டிவிட்டது. கடைசியாக நடந்த 11 டெஸ்ட் போட்டிகளில் 7 தோல்வி, 4 டிரா என்று ஒரு வெற்றியை கூட பாகிஸ்தான் அணியால் சொந்த மண்ணில் அடைய முடியவில்லை. இந்த சோகத்தை பற்றி கவலைப்படாமல், ஷாகின் அப்ரிடி சக வீரரான பாபர் அசாமை வம்புக்கு இழுப்பதில் கவனமாக இருந்து வருகிறார்.
இதனால் ஷாகின் அப்ரிடியை பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அதேபோல் பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக உள்ள ஷான் மசூத் பொறுப்பேற்று தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார். இதற்கு அவர் வீரர்களை கட்டுப்படுத்த முயற்சிக்காததே காரணமாக பார்க்கப்படுகிறது.