முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம் நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. பாபர் அசாம் மட்டுமல்லாமல் சீனியர் வீரர்களான ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா உள்ளிட்டோரும் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
1,338 நாட்களுக்கு பின் ஒரு வழியாக பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் புத்துயிர் பெற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணியில் இருந்து நட்சத்திர வீரர்களான பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் நீக்கப்பட்ட பின், இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.

பாபர் அசாம் போன்ற நட்சத்திர வீரர் நீக்கப்பட்டதை ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றாலும், பாகிஸ்தான் அணி உடனடியாக வெற்றி பாதைக்கு திரும்பி இருப்பது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின், பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவுள்ளதால், அதற்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் அணி அடுத்த 2 மாதங்களில் 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. கடந்த உலகக்கோப்பை தொடருக்கு பின், ஒரு ஒருநாள் போட்டியில் கூட பாகிஸ்தான் அணி விளையாடவில்லை. டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது.
இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி மற்றும் நசீம் ஷா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம் என்று பாகிஸ்தான் அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் பாபர் அசாமிற்கு அக்னி பரீட்சையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
ஜிம்பாப்வே உள்ளிட்ட சிறிய அணிகளுக்கு எதிராக மட்டும் பாபர் அசாம் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தார். இதற்கு முடிவு கட்டும் வகையில் பாபர் அசாமை பாகிஸ்தான் அணியில் சேர்க்க வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதன்பின் பாபர் அசாம் உள்நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவும் பாகிஸ்தான் நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.