முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து நட்சத்திர வீரர் பாபர் அசாம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கடைசியாக பாபர் அசாம் விளையாடிய 18 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்காததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்பார்க்காத அளவிற்கு சரிவை சந்தித்து வருகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏராளமான குழப்பங்கள் நடந்து வரும் சூழலில், இன்னொரு பக்கம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குள்ளும் பல்வேறு மோதல்கள் வெடித்து வருகின்றன. கேப்டன்சியை வைத்து வீரர்கள் அனைவரும் விளையாடி வருவது வாடிக்கையாக இருக்கிறது.

இதனால் சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டியிலேயே பாகிஸ்தான் அணி தோல்வியடைந்து வருகிறது. கடைசியாக பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் 7 தோல்வி, 4 டிராவில் முடிவடைந்துள்ளன. வங்கதேச அணியிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியிடம் படு கேவலமாக விளையாடி தோல்வியை சந்தித்தது.
முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் விளாசிய போதும், 147 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த முதல் அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலாவது கவுரவமான ஆட்டத்தை பாகிஸ்தான் அணி வெளிப்படுத்துமா என்ற கேள்வி ரசிகர்களிடையே உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாமை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாம் கடைசியாக விளையாடிய 18 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் அவருக்கு சில காலம் ஓய்வு அளிக்கலாம் என்று தேர்வுக் குழு முடிவெடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் நிர்வாகத்தில் நியமனம் செய்யப்பட்ட புதிய தேர்வுக் குழு தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி மற்றும் கேப்டன் ஷான் மசூத் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய போது, பாபர் அசாமை நீக்குவது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. அப்போது சிலர் பாபர் அசாமிற்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்து கூறியுள்ளனர்.
ஆனால் பெரும்பான்மை நிர்வாகிகள் பாபர் அசாமிற்கு ஓய்வு அளிக்கலாம் என்று கருத்து கூறியதால், 2வது டெஸ்டில் இருந்து அவரை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சுழற்பந்துவீச்சாளர் அப்ரார் அஹ்மத் காயமடைந்துள்ளதால், அவருக்கு பதிலாக நோமன் அலி அல்லது சாஜித் கானை கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2வது டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்தால், தொடரை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.