முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் அந்த அணியின் கேப்டன் ஷான் மசூத் மற்றும் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் அசாமை விளாசி வருகின்றனர்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்தது. ஆனால், பாபர் அசாம் முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அடுத்து இங்கிலாந்து அணி 823 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. அதன் பின் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடிய போது, பாபர் அசாம் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து இருந்தார்.

மோசமான ஆட்டத்தை தொடரும் பாபர் அசாம் அணியை விட்டு வெளியேற வேண்டும் என முன்னாள் வீரர் பாஸித் அலி வெளிப்படையாக கூறி இருக்கிறார். உலகமே அவரது பேட்டிங்கை பார்த்து சிரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷான் மசூத் பொறுப்பேற்ற பின் பாகிஸ்தான் அணி, தான் ஆடிய ஆறு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்திருப்பதை சுட்டிக்காட்டி அவர் கேப்டனாக தோற்று விட்டார் என விமர்சித்து இருக்கிறார்.
இது குறித்து பாஸித் அலி பேசுகையில், "பாபர் அசாம் ஓய்வு எடுக்க வேண்டும். அவராகவே முன்வந்து எனக்கு ஓய்வு வேண்டும் என சொல்ல வேண்டும். அவர் அரை சதம் அடித்து 18 இன்னிங்ஸ்களுக்கும் மேல் ஆகிறது. இதே வேறு ஒரு வீரராக இருந்தால் அவர் அணியை விட்டே நீக்கப்பட்டு இருப்பார். ஃபாவாத் ஆலம் போன்ற ஒரு வீரர் என்றால் மூன்று போட்டிகளுக்கு பின் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பார். இதுதான் கசப்பான உண்மை." என்றார்.
மேலும், "பாபர் அணியில் நீடிப்பேன் என்ற தனது பிடிவாதத்தை விட வேண்டும். அது எல்லை மீறி செல்கிறது. உலகமே அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கிறது. இப்படித்தான் ஒரு பேட்ஸ்மேன் ஆடுவாரா?" என பாபர் அசாமை விளாசி இருக்கிறார் பாஸித் அலி.
மேலும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் பற்றி பேசுகையில், "ஷான் மசூத் ஒரு கேப்டனாக தோல்வி அடைந்து விட்டார். ஷான் மசூத் ஒரு துவக்க வீரர். அவர் துவக்க வீரராகவே ஆட வேண்டும் என நான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். ஆனால், அவர் மூன்றாம் வரிசையில் இறங்குகிறார். இப்போது என்ன செய்வது? யாரை அணியிலிருந்து நீக்குவது? அவர், அவரது இடத்தில் விளையாட வேண்டும். அவருக்கு எப்படி கேப்டன்சி செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. இந்த கிரிக்கெட் அணிக்கு என்னதான் நடக்கிறது? இது மிகவும் அவமானமாக உள்ளது." என்று பாஸித் அலி புலம்பி இருக்கிறார்.