முல்தான்: இங்கிலாந்து அணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவதற்கான வழியை பாகிஸ்தான் பவுலர்களால் கண்டறிய முடியவில்லை என்று கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். தங்களின் விக்கெட்டினை இங்கிலாந்து அணி வெற்றிக்கான வழியை கண்டுபிடித்ததை போல், எந்த பிட்சாக இருந்தாலும் பாகிஸ்தான் அணியும் வெற்றிக்கான வழியை கண்டறிய முயற்சிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 550 ரன்களுக்கு மேல் குவித்த போதும், ஒரு அணி தோல்வியடைந்திருப்பது இதுவே முதல்முறையாகும். சொந்த மண்ணில் கடைசியாக விளையாடி 9 டெஸ்ட் போட்டிகளில் 7வது தோல்வியை பாகிஸ்தான் அணி சந்தித்துள்ளது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 556 ரன்களை குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக 267 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 82 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தொடர்ந்து 5வது நாள் ஆட்டத்தின் சல்மான் ஆகா - அமீர் ஜமால் சிறிது நேரம் போராடினர். இறுதியாக ஜேக் லீச் பவுலிங்கில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்ந்தன. இதனால் பாகிஸ்தான் அணி வெறும் 220 ரன்கள் எடுத்து இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வியால் பாகிஸ்தான் ரசிகர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் பேசுகையில், 3வது இன்னிங்ஸ் குறித்து ஏராளமான விஷயங்களை பேசினோம். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இது ஒரு குழு விளையாட்டு. எல்லா விஷயங்களிமும் சாதகமும், சிக்கலும் இருக்கும். முதல் இன்னிங்ஸில் 550 ரன்களை விளாசிய பின், இங்கிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் விரைவாக வீழ்த்த முயற்சித்திருக்க வேண்டும்.
ஒருவேளை இங்கிலாந்து அணியை விரைந்து ஆல் அவுட் செய்திருந்தால், 3வது இன்னிங்ஸில் எடுத்த 220 ரன்களே சிறந்த ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால் இங்கிலாந்து அணி பவுலர்கள் எங்களின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவதற்கான சரியான வழியை கண்டறிந்திருக்கின்றனர். நாங்களும் அதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டிய தேவை உள்ளது. எங்கள் முன் நிற்கும் சவால் அதுதான். டெஸ்ட் தொடரின் நடுப்பகுதியில் நின்று கொண்டிருக்கிறோம்.
பாகிஸ்தான் அணியின் குணமும், கன்சிஸ்டன்சி குறித்தும் பேசி இருக்கிறோம். பிட்ச் எப்படி இருந்தாலும், வெல்வதற்கான வழியை கண்டறிய வேண்டும். அதனை இங்கிலாந்து அணி செய்து காட்டியுள்ளது. சில நேரங்களில் சூழலும், பிட்சும் உதவியாக இருக்கும். சில நேரங்கள் அப்படி அமையாது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கன்சிஸ்டன்சியுடன் விளையாட வேண்டும். இந்த முடிவு எங்களை காயப்படுத்துகிறது.
தேசத்தையே காயப்படுத்தி இருக்கும். ஆனாலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி செல்லப் போவதில்லை. இதனை விட பாகிஸ்தான் அணிக்கு தகுதியான வெற்றிகளை கிடைக்காததே சோகத்தை அளித்துள்ளது. நிச்சயம் வெற்றிக்காக தீவிரமாக முயற்சித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பவுலர்கள் வீசிய 150 ஓவர்களில் ஒரேயொரு ஓவர் தான் மெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது.