முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மிகப் பெரிய அளவில் ரன் குவித்து கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. முல்தானில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் சேர்த்து இருந்தது.
அடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது. அந்த அணியால் பாகிஸ்தானின் ஸ்கோரை எட்ட முடியாது என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அபாரமாக ரன் குவித்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் நான்காவது விக்கெட்டுக்கு 454 ரன்கள் கூட்டணி அமைத்து பாகிஸ்தானை சுக்கு நூறாக நொறுக்கினர்.

ஜோ ரூட் 262 ரன்கள் சேர்த்தார். ஹாரி ப்ரூக் 317 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 823 ரன்கள் சேர்த்து டிக்ளர் செய்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 800 ரன்களுக்கும் அதிகமாக சேர்க்கப்பட்ட நான்காவது போட்டியாக இது அமைந்துள்ளது.
இங்கிலாந்து அணி 823 ரன்கள் குவித்ததன் மூலம் முதல் இன்னிங்ஸில் 267 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய பாகிஸ்தான் அணி 152 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட்களை இழந்துள்ளது. ஐந்தாவது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி விரைவில் விக்கெட்களை இழந்தால் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியடையும். தற்போது பாகிஸ்தான் அணி 115 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
பாகிஸ்தான் அணி எளிதாக ரன் சேர்த்து இங்கிலாந்து அணியை திணற வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சை தயார் செய்து இருந்தது. அது அந்த அணிக்கே வினையாக மாறி உள்ளது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எப்போதுமே அதிரடியாக ஆடக் கூடியவர்கள். அவர்களுக்கு முல்தான் பிட்ச் சரியான வேட்டையாக அமைந்துவிட்டது.
டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட அதிக ஸ்கோர் (முதல் எட்டு ஸ்கோர்) -
இலங்கை: 952/6 vs இந்தியா
இங்கிலாந்து: 903/7 vs ஆஸ்திரேலியா
இங்கிலாந்து: 849 vs வெஸ்ட் இண்டீஸ்
இங்கிலாந்து: 823/7 vs பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீஸ்: 790/3 vs பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 765/6 vs இலங்கை
இலங்கை: 760/7 vs இந்தியா
இந்தியா: 759/7 vs இங்கிலாந்து