கராச்சி: பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை, விராட் கோலியுடன் ஒப்பிட்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு பக்கமும் விமர்சனத்தை சந்தித்து இருக்கிறார் பாகிஸ்தான் வீரர் ஃபாக்கர் ஜமான். பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் அசாம் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவுதான் இதற்கு காரணம்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள நிலையில் அந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து பாபர் அசாம் நீக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே முக்கிய அணிகளுக்கு எதிராக சரியாக ரன் குவிப்பதில்லை என்ற விமர்சனத்தை சந்தித்து வருகிறார் பாபர்.

டெஸ்ட் போட்டிகளில் கடைசியாக ஆடிய 18 இன்னிங்ஸ்களில் அவர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இதை அடுத்து அவர் மீது கடுமையான விமர்சனம் எழுந்து வந்தது. மேலும், பாகிஸ்தான் அணியும் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்ததால் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். அவருடன் ஷஹீன் ஷா அப்ரிடி, நசிம் ஷா ஆகியோரும் நீக்கப்பட்டு இருக்கின்றனர்.
இது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சக பாகிஸ்தான் வீரரான ஃபாக்கர் ஜமான் விராட் கோலியை, பாபர் அசாம் உடன் ஒப்பிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை விமர்சித்து இருக்கிறார். அதற்கு இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஃபாக்கர் வெளியிட்டு இருக்கும் பதிவில், விராட் கோலி 2020 முதல் 2023 வரை மோசமான ஃபார்மில் இருந்த போதும், அவரது பேட்டிங் சராசரி மோசமாக இருந்த போதும், அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படவில்லை என்பதை சுட்டி காட்டி பாகிஸ்தான் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருக்கும் பாபர் அசாமையும் விராட் கோலியை போல நாம் பாதுகாக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
இதற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். விராட் கோலி ஒரு வீரராகவும், கேப்டனாகவும் பல்வேறு சாதனைகளை செய்த பின்னரே ஃபார்ம் அவுட் ஆகி இருந்தார். அப்போதும் அவர் சதம் அடிக்கவில்லையே தவிர, அரை சதங்களை அவ்வப்போது அடித்து வந்தார்.
மேலும், அந்த காலகட்டத்திலும் முக்கியமான தொடர்களில் அவர் ரன் சேர்த்திருப்பதை சுட்டிக்காட்டி ஃபாக்கர் ஜமானுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே போல பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பும் இந்த ஒப்பீட்டை ரசிக்கவில்லை. ஃபாக்கர் ஜாமானுக்கு உடனடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகள் விளக்கம் கேட்டதோடு, அவரை கண்டித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஃபாக்கர் ஜமான் வெளியிட்டுள்ள அந்த பதிவு - "பாபர் அசாமை அணியில் இருந்து நீக்கியது கவலை அளிக்கிறது. விராட் கோலி 2020 முதல் 2023 வரை மோசமான ஃபார்மில் இருந்தபோது இந்திய அணி அவரை நீக்கவில்லை. அப்போது அவரது சராசரி மூன்று ஆண்டுகளில் 19.33, 28.21 மற்றும் 26.5 ஆக இருந்தது. பாகிஸ்தானின் முன்னணி பேட்ஸ்மேனை ஓரங்கட்டி வைக்கப் போகிறோம் என்றால் அது பாகிஸ்தான் அணியில் அனைவருக்கும் ஒரு எதிர்மறையான செய்தியை கொண்டு செல்லும். நாம் அவசரப்பட வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை. நமது முக்கிய வீரர்களை பாதுகாக்கும் வேலையை தான் செய்ய வேண்டும். அவர்களை புதைக்கும் வேலையை செய்யக்கூடாது." என்று கூறி இருக்கிறார்.