முல்தான்: பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழு உறுப்பினராக முன்னாள் நடுவர் அலீம் தார் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் குறித்து பாகிஸ்தான் நிர்வாகம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி சரிவை சந்தித்து வருகிறது. உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு கூட முன்னேறாத பாகிஸ்தான் அணி, டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றுடன் வெளியேறியது. இதன்பின் சொந்த மண்ணில் நடந்த வங்கதேச டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்ததோடு, தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டிலும் தோல்வியைடைந்துள்ளது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்த போதும், பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை போல் இப்படி படுகேவலமான தோல்வியை எந்த அணியும் பெற்றதில்லை. இதனால் அந்த அணியின் ரசிகர்களே பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வியின் எதிரொலி காரணமாக, பாகிஸ்தான் அணி நிர்வாகம் தேர்வுக் குழுவில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் தேர்வுக் குழுவில் அலீம் தார், அயூப் ஜாவித், அசார் அலி மற்றும் ஹசன் சீமா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நாளை பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் மற்றும் பயிற்சியாளர் கில்லஸ்பியை சந்தித்து, 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியை தேர்வு செய்ய உள்ளனர். இதில் அலீம் தார் என்பவர் சர்வதேச கிரிக்கெட்டில் அம்பயராக பணியாற்றி வந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை அலீம் தார் 132 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டிகள் மற்றும் 69 டி20 போட்டிகளில் அம்பயராக பணியாற்றியுள்ளார்.
ஐசிசி தரப்பில் அளிக்கப்படும் சிறந்த அம்பயருக்கான விருதை அலீம் தார் 3 முறை வென்றிருக்கிறார். சில வாரங்களுக்கு முன் ஓய்வு பெற்ற அலீம் தார், தற்போது பாகிஸ்தான் தேர்வுக் குழு உறுப்பினராக பொறுப்புக்கு வந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் தேர்வுக் குழு உறுப்பினராக இருப்பதற்கு உள்ளூர் கிரிக்கெட்டை தொடர்ந்து கவனித்து வந்திருக்க வேண்டும். பாகிஸ்தான் அணியின் தேவைகள் என்ன, என்ன மாதிரியான வீரர்களை தேசிய அணிக்கு கொண்டு வர வேண்டும், உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரர்களின் திறமை என்று பல்வேறு விவரங்களையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
இதன்பின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களுடன் ஆலோசனையின் போது, பாகிஸ்தானின் தேவை என்ன என்பதை அறிந்து சோதனைக்கு அழைத்து வர வேண்டும். ஆனால் சில வாரங்களாக ஓய்வில் இருந்த அலீம் தார், எதன் அடிப்படையில் தேர்வுக் குழுவில் சேர்க்கப்பட்டார் என்பது தெரியவில்லை. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.