இஸ்லாமாபாத்: கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை எந்த அணியிலும் நடக்காத ஒரு மோசமான சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நடந்து இருக்கிறது. பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். அதன் பின் அவர் பாகிஸ்தான் விளையாடிய டி20 தொடர்கள் மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் மட்டுமே பயிற்சியாளராக பணியாற்றி இருந்தார்.
பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் அவர் சொன்ன மாற்றங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கும், கேரி கிர்ஸ்டனுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் எழுந்து இருந்தன. அதனால், கேரி பிஸ்டன் வெறுப்புடன் இருந்தார்.

இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் உயர் செயல்பாட்டு திறன் பயிற்சியாளராக டேவிட் ரெய்டு என்பவரை நியமிக்க வேண்டும் என கேரி கிர்ஸ்டன் கோரிக்கை வைத்து இருந்தார். அதை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு நிராகரித்து விட்டது. இதை அடுத்து அவர் பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார்.
அவர் பயிற்சியாளராக இருந்த இந்த நான்கு மாதங்களில் பாகிஸ்தான் அணி ஒரு ஒருநாள் போட்டி தொடரிலும் விளையாடவில்லை. எனவே, அவர் பாகிஸ்தான் அணிக்கு ஒருநாள் போட்டிகளில் பயிற்சியாளராக செயல்படவில்லை. கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒருநாள் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின் ஒரு போட்டிக்கு கூட பயிற்சி அளிக்காமல் பதவி விலகிய ஒரே பயிற்சியாளர் என்ற பெயரை பெற்று இருக்கிறார் கேரி கிர்ஸ்டன்.
அந்த அளவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அவரை பாடாய்படுத்தி இருக்கிறது. தற்போது கேரி கிர்ஸ்டனுக்கு பதிலாக ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளராக பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவரும் விரைவில் பதவி விலக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கேரி கிர்ஸ்டன் 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர். அதனால், அவருக்கு ஐபிஎல் உட்பட உலகின் பல்வேறு டி20 லீக் அணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. அவரை பாகிஸ்தான் அணி மோசமாக நடத்தி இருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய ரசிகர்கள் பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை விமர்சித்து வருகின்றனர்.