முல்தான்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் 310 பந்துகளில் முச்சதம் விளாசியதன் மூலமாக, இந்திய ஜாம்பவான் வீரேந்தர் சேவாக்கின் 20 ஆண்டு கால சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
2004ஆம் ஆண்டு முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான வீரேந்தர் சேவாக் முச்சதம் விளாசி சாதனை படைத்தார். இந்த மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சேவாக் 309 ரன்கள் விளாசியதே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. இந்த சாதனையை இங்கிலாந்து அணியின் இளம் வீரரான ஹாரி ப்ரூக் முறியடித்துள்ளார்.

முல்தான் மைதானத்தில் நடந்து வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 150 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 823 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அதிரடியாக ஆடிய ஹாரி ப்ரூக் 322 பந்துகளில் 3 சிக்ஸ், 29 பவுண்டரி உட்பட 317 ரன்களை விளாசி அசத்தினார். இதன் மூலமாக 27 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் ஒரு அணி 800 ரன்களை குவித்துள்ளது.
அதேபோல் இங்கிலாந்து அணிக்காக முச்சதம் விளாசிய 6வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் குறைந்த பந்துகளில் முச்சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஹாரி ப்ரூக் 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இந்த பட்டியலில் 2008ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 278 பந்துகளில் முச்சதம் விளாசிய சேவாக் முதலிடத்தில் இருக்கிறார்.
தொடர்ந்து ஹாரி ப்ரூக் 2வது இடத்திலும், மேத்யூ ஹெய்டன் 362 பந்துகளில் முச்சதம் விளாசி 3வது இடத்திலும் இருக்கிறார். அதேபோல் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் கூட்டணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் 4வது விக்கெட்டுக்கு களமிறங்கி 454 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய 28வது வீரர் என்ற பெருமையையும் ஹாரி ப்ரூக் பெற்றுள்ளார். முல்தான் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இங்கிலாந்து அணி 2 நாளில் 800 ரன்களுக்கு மேல் குவித்திருப்பது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.