ராவல்பிண்டி: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரும், பாகிஸ்தான் அணியின் தற்போதைய பயிற்சியாளருமான ஜேசன் கில்லெஸ்பி, பாகிஸ்தான் அணி வீரர்கள் வீசிச் சென்ற குப்பைகளை நீண்ட நேரம் பொறுக்கி எடுத்து சுத்தம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜேசன் கில்லெஸ்பி தற்போது பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். பாகிஸ்தான் அணி சமீபகாலமாக மிக மோசமாக விளையாடி வரும் நிலையில் கடும் விமர்சனத்தையும் சந்தித்து இருந்தார். சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் அணி வென்றதால் பாகிஸ்தான் மண்ணில் 1338 நாட்களுக்குப் பிறகு முதல் வெற்றி பெற்றது.

அந்த வெற்றிக்கு ஜேசன் கில்லெஸ்பியும் ஒரு முக்கிய காரணம். அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தயாராகி வந்தது. அதற்காக ராவல்பிண்டி மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தான் வீரர்கள் தண்ணீர் குடித்துவிட்டு வாட்டர் பாட்டிலை மைதானத்தில் ஆங்காங்கே வீசிச் சென்றனர்.
மேலும், குளிர்பானம், தின்பண்டம் ஆகியவற்றையும் சாப்பிட்டுவிட்டு ஆங்காங்கே அந்த குப்பைகளை வீசினர். பாகிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்தை விட்டு சென்ற பின் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி அனைத்து குப்பைகளையும் சேகரித்து குப்பை தொட்டியில் போட்டார். மைதான ஊழியர்கள் கூட அவருக்கு உதவவில்லை. நியாயமாக மைதான ஊழியர்கள் அல்லது அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை.
இந்த நிலையில், அவர் குப்பைகளை சேகரிக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் பலரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் நிர்வாகத்தையும், பாகிஸ்தான் வீரர்களின் மனநிலையையும் விமர்சித்து வருகின்றனர். ஒரு பயிற்சியாளர் மைதானத்தை விட்டு வெளியேறாமல் வீரர்கள் மைதானத்தை விட்டு செல்லக்கூடாது. அந்த அளவுக்கு அவருக்கு மரியாதை அளிக்க வேண்டும்.
தாங்கள் வீசிய குப்பைகளை தங்கள் அணியின் பயிற்சியாளர் சுத்தம் செய்கிறார் என்பதை எண்ணி அவர்கள் வெட்கப்பட வேண்டும் என பலரும் விளாசி வருகின்றனர். மேலும், ராவல்பிண்டி மைதான அதிகாரிகள் அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் யாரேனும் கில்லெஸ்பியை தடுத்து, பாகிஸ்தான் வீரர்களை கண்டித்து இருக்க வேண்டும் எனவும் சுட்டிக் காட்டி வருகின்றனர்.