ராவல்பிண்டி: 142 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத வரலாற்று நிகழ்வு ஒன்றை செய்து காட்டி இருக்கிறது பாகிஸ்தான் அணி. ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வேகப்பந்துவீச்சாளர் ஒரு பந்து கூட வீசாத நிகழ்வு நடந்துள்ளது. கிரிக்கெட்டில் இதற்கு முன் ஒருமுறை மட்டுமே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தப் போட்டியில் மேலும் ஒரு சாதனை சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தான் - இங்கிலாந்து மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணி சுழற் பந்துவீச்சாளர்களான சஜித் கான் மற்றும் நோமன் அலியை முதலில் பந்து வீச அழைத்தது.

இதன் மூலம் கிரிக்கெட்டில் அரிய நிகழ்வாக முதல் இன்னிங்ஸில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை துவக்கிய நிகழ்வு நடந்தது. இது போன்ற நிகழ்வு டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை நான்கு முறை மட்டுமே நடந்துள்ளது. இதற்கு முந்தைய டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் 20 விக்கெட்களையும் சஜித் கான் மற்றும் நோமன் அலி வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது இவர்கள் இருவரும் இணைந்து 42 ஓவர்களை தொடர்ந்து வீசி இருந்தனர். இரண்டாவது போட்டியிலும் இவர்கள் இருவருமே அதிக ஓவர்களை வீசினர். சஜித் கான் 29.2 ஓவர்கள் வீசி 6 விக்கெட்களை வீழ்த்தினார். நோமன் அலி 28 ஓவர்கள் வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். மற்றொரு சுழற் பந்துவீச்சாளரான ஜாஹித் முகமது ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
பாகிஸ்தான் அணியில் நான்காவதாக பந்து வீசியவரும் ஒரு சுழற்பந்துவீச்சாளர் தான். ஆகா சல்மான் நான்காவது பந்துவீச்சாளராக ஒரு ஓவர் மட்டும் வீசி இருந்தார். இவர்கள் நால்வர் மட்டுமே பாகிஸ்தான் அணிக்காக முதல் இன்னிங்ஸில் பந்து வீசி இருந்தனர். இந்த டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளராக அமீர் ஜமால் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்று இருந்த போதும் அவருக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இதன் மூலம், 142 ஆண்டுகளுக்கு பின் ஒரு அணி முதல் இன்னிங்ஸ் முழுவதும் சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து மட்டும் பந்துவீசி உள்ள நிகழ்வு நடந்து இருக்கிறது. இதற்கு முன் 1882 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா ஜோய் பால்மர் மற்றும் எட்வின் ஈவான்ஸ் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து 115 ஓவர்கள் வீசி இந்த சாதனையை செய்து இருந்தது.
அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவர்கள் இருவரைத் தவிர வேறு எந்த பந்து வீச்சாளரும் பந்து வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு தற்போது பாகிஸ்தான அணி நான்கு ஸ்பின்னர்களை முதல் இன்னிங்ஸில் பயன்படுத்தி இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் எடுத்தது. ஜேமி மிஸ்மித் 89 ரன்களும், பென் டக்கெட் 52 ரன்களும் எடுத்திருந்தனர். அடுத்த ஆடிய பாகிஸ்தான் அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்து இருக்கிறது.