முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்துள்ளது. அதிலும் முதல் இன்னிங்க்ஸில் 556 ரன்கள் குவித்த பின்னரும் பாகிஸ்தான அணி படுதோல்வி அடைந்திருப்பதற்கு முக்கிய காரணம் பிட்ச் தான் என முன்னாள் வீரர்கள் சுட்டிக்காட்டி விளாசி வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டு இதே இங்கிலாந்து அணி, இந்த முதல் டெஸ்ட் போட்டி நடந்த இதே முல்தான் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது. அந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்ஸில் 550 ரன்களுக்கும் மேல் குவித்து இருந்தது. அதன் பின்னரும் இங்கிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு அப்போது பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது.

அதே போன்ற வெற்றியை தற்போது மீண்டும் பெற்று இருக்கிறது, இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 556 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 823 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. பாகிஸ்தான் அணியை விட 267 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.
இந்த இரண்டு ஆண்டு காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மற்றும் முல்தான் மைதான ஊழியர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. முல்தான் மைதானம் பொதுவாகவே "தார் சாலை" என விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் ஒரு மைதானம் ஆகும். தார் சாலையில் எளிதாக பேட்டிங் செய்யலாம், பிட்ச்சில் பந்துவீச்சுக்கு சாதகமான அம்சம் எதுவும் இருக்காது என்பதை சுட்டிக் காட்டவே இதுபோன்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு இதே முல்தான் மைதானத்தில் தான் சேவாக் முச்சதம் விளாசி இருந்தார். அதன் பின்பு பலமுறை அந்த மைதானத்தில் அதிக அளவிலான ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. 2022 இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்த போது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருந்த முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, பாகிஸ்தானில் நல்ல பிட்ச்களை தயாரிப்பதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று வெளிப்படையாகவே பேசி இருந்தார்.
அப்போது அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஆனால், இப்போது அதுதான் உண்மை என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. அதே விஷயம் மீண்டும் நடந்ததை பார்த்த ரமீஸ் ராஜா வர்ணனையின் போது சோகத்துடன் பேசினார். "நிச்சயம் இந்த பிட்ச் குறித்து பந்துவீச்சாளர்கள் கேள்வி எழுப்புவார்கள். ஏனெனில், அவர்கள் தங்கள் முதுகை வளைத்து வீசிப் பார்த்து விட்டார்கள். ஒன்றும் நடக்கவில்லை. இது போன்ற பிட்ச்சை ஏன் அளித்தீர்கள்? என பலரும் இனி கேள்வி எழுப்புவார்கள். நம் சொந்த மைதானத்திலேயே இது போன்ற பிட்ச்சில் நாம் ஏன் ஆடுகிறோம்? எனவும் கேள்வி எழுப்புவார்கள்." என கூறி இருக்கிறார்.