முல்தான்: பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி முல்தான் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 149 ஓவர்களில் 556 ரன்கள் குவித்து அசத்தி இருக்கிறது. அந்த அணியின் மூன்று வீரர்கள் சதம் அடித்தனர்.
அதிலும் எட்டாம் வரிசை வீரராக இறங்கிய ஆகா சல்மான் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்று சதம் அடித்தார். அவர் 119 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து இருந்தார். முதல் நாள் ஆட்டத்தில் அப்துல்லா ஷபிக் 102 ரன்களும், கேப்டன் ஷான் மசூத் 151 ரன்களும் குவித்து இருந்தனர். சவுது ஷகீல் 82 ரன்கள் சேர்த்திருந்தார். இதை அடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் குவித்தது.

இதற்கு முன் பாகிஸ்தான் மண்ணில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி 2 - 0 என தோல்வி அடைந்து இருந்தது. அதனால் இங்கிலாந்து அணியை வீழ்த்திக் காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறது பாகிஸ்தான் அணி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே இங்கிலாந்து அணியிடம் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த முறை சுதாரித்துக் கொண்ட பாகிஸ்தான் அணி முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்து இருக்கிறது. எனினும், முல்தான் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால் இங்கிலாந்து அணியும் 500 ரன்கள் எடுக்க வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு முதல் இன்னிங்ஸில் சுத்தமாக ஈடுபடவில்லை.
சுழற் பந்துவீச்சாளர் ஜாக் லீச் 40 ஓவர்கள் வீசி 160 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். மற்றொரு சுழற் பந்துவீச்சாளர் ஷோயப் பஷீர் 32 ஓவர்கள் வீசி 124 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். வேகப் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் 2 விக்கெட்களும், பிரைடன் கார்ஸ் 2 விக்கெட்களும் வீழ்த்தினர். கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோ ரூட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.