முல்தான்: 1,338 நாட்களுக்கு பின் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிய பாகிஸ்தான் அணி, 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடியது. மீண்டும் முல்தான் மைதானத்தில் நடந்த போட்டியில், இம்முறை பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டாஸ் வென்று முதல் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி அறிமுக வீரர் கம்ரான் குலாமின் அபார சதத்தால் 366 ரன்களை குவித்தது.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி பென் டக்கெட் சதத்தால் 291 ரன்களை சேர்த்தது. இதனால் பாகிஸ்தான் அணி 75 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறந்த பங்களிப்பை அளிக்க, 221 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 297 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
3வது நாள் ஆட்டம் நேர முடிவில் இங்கிலாந்து அணி 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது. இந்த நிலையில் 4வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணியின் போப் - ஜோ ரூட் கூட்டணி தொடங்கியது. ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே சாஜித் கான் பவுலிங்கில் போப் 22 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் முழுக்க முழுக்க பாகிஸ்தான் ஸ்பின்னர் நோமன் அலியின் ஆதிக்கம் தொடங்கியது.

அவர் பவுலிங்கில் ஜோ ரூட் 18 ரன்களில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஹாரி ப்ரூக் - பென் ஸ்டோக்ஸ் கூட்டணி இணைந்து விரைவாக ரன்களை குவித்தது. ஆனால் பாகிஸ்தான் அணி தரப்பில் 2 ஸ்பின்னர்களை மட்டுமே கேப்டன் ஷான் மசூத் பயன்படுத்தி வந்தார்.
ஒரு பக்கம் ஷாஜித் கான் அட்டாக் செய்ய, இன்னொரு பக்கம் நோமன் அலி வெறித்தனமாக ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தார். இதனால் முச்சத நாயகன் ஹாரி ப்ரூக் 16 ரன்களிலும், பின்னர் வந்த ஜேமி ஸ்மித் 6 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். நோமன் அலி பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று டவுன் தி டிராக் இறங்கி வந்த பென் ஸ்டோக்ஸ், திடீரென பந்து பவுன்ஸ் ஆகாமல் தாழ்வாக சென்றதை கவனித்தார்.
அப்போது அவரது கைகளில் இருந்து பேட் பறக்க, எளிதாக ரிஸ்வானால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு பரிதாபமாக வெளியேறினார். பின்னர் அடுத்தடுத்து டெய்லண்டர்களை இரு ஸ்பின்னர்களை வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி 144 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக பாகிஸ்தான் அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் 2021ஆம் ஆண்டுக்கு பின் சுமார் 1,338 நாட்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது.
அதேபோல் இந்தப் போட்டியில் 20 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் அணியின் ஸ்பின்னர்கள் கைப்பற்றியுள்ளனர். 1987ஆம் ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் அணி இரு ஸ்பின்னர்களும் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது இதுவே முதல்முறையாகும். அதுமட்டுமல்லாமல் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.