ராவல்பிண்டி: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலமாக 3 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால், கடைசி போட்டியில் வென்று எந்த அணி தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, ஜேமி ஸ்மித்தின் அபார ஆட்டத்தால் 267 ரன்களை விளாசியது.

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் பாகிஸ்தான் அணியின் சாவுத் சக்கீல் அபாரமாக சதமடித்து, பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை 344 ரன்களாக உயர்த்தினார். இதனால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸிலேயே 77 ரன்களுக்கு முன்னிலை பெற்றது. இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 2வது நாள் முடிவில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின் 3வது நாள் ஆட்டத்தை ஜோ ரூட் - ஹாரி ப்ரூக் கூட்டணி தொடங்கியது. இருவரும் விக்கெட் கொடுக்க கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தனர். சுமார் 11 ஓவர்கள் தாக்கு பிடித்த நிலையில், நோமன் அலி பவுலிங்கில் ஹாரி ப்ரூக் 26 ரன்களில் எடுத்து வெளியேற, பின்னர் வந்த கேப்டன் ஸ்டோக்ஸ் 2 ரன்களிலும், ஜேமி ஸ்மித் 3 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இன்னொரு பக்கம் நிலையாக நின்று ஆடிய ஜோ ரூட் 33 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த டெய்லெண்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி வெறும் 112 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 37 ரன்களாக இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சயீம் அயூப் 8 ரன்களில் வெளியேற, கேப்டன் ஷான் மசூத் களமிறங்கி அதிரடியாக ரன்களை குவித்தார். இதனால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.
அதேபோல் 9 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி பாகிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 2021ஆம் ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தான் மண்ணில் வென்று முதல்முறையாக பேஸ்பால் கிரிக்கெட்டை இங்கிலாந்து அணி தொடங்கி வைத்தது. தற்போது அதே பாகிஸ்தான் மண்ணில் பேஸ்பால் கிரிக்கெட்டுக்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.