முல்தான்: முல்தானில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை 152 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் இரண்டு ஸ்பின்னர்கள் இங்கிலாந்து அணியின் 20 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன் மூலம் 52 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அரிய சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்து இருந்தது. சொந்த மண்ணில் நீண்ட காலமாக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்ற சோகத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, முன்னணி வீரர்களான பாபர் அசாம் மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி ஆகியோரை அணியில் இருந்து நீக்கி இருந்தது.

மேலும், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்சை தயார் செய்தது. அணியில் ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளரை மட்டும் வைத்துக் கொண்டு, நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை ஆட வைத்தது. அந்தத் திட்டம் சரியாக வேலை செய்தது. இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 366 ரன்கள் சேர்த்தது.
அடுத்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. இங்கிலாந்து அணியின் 10 விக்கெட்களையும் பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் சஜித் கான் மற்றும் நோமன் அலி வீழ்த்தி இருந்தனர். அடுத்து பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு 296 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், இங்கிலாந்து அணி 144 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்களான சஜித் கான் இரண்டு விக்கெட்களையும், நோமன் அலி எட்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதன் மூலம், இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் 20 விக்கெட்களையும் சஜித் கான் மற்றும் நோமன் அலி மட்டுமே வீழ்த்தி சாதனை படைத்தனர். சஜித் கான் 9 விக்கெட்களையும், நோமன் அலி 11 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். இதன் மூலம் 52 ஆண்டுகளுக்கு பின்பு ஒரு டெஸ்ட் போட்டியில் எதிரணியின் 20 விக்கெட்களையும் இரண்டு பந்துவீச்சாளர்கள் மட்டுமே வீழ்த்திய அரிய சாதனை செய்யப்பட்டு இருக்கிறது.
கடைசியாக 1972 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பாப் மேஸி மற்றும் டெனிஸ் லில்லி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 20 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். அதில் பாப் மேஸி மட்டுமே 16 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அதன் பின் 52 ஆண்டுகள் கழித்து தற்போது பாகிஸ்தான் அணியின் சஜித் கான் மற்றும் நோமன் அலி இங்கிலாந்து அணிக்கு எதிராக 20 விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர். இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் எதிர் அணியின் 20 விக்கெட்களையும் இரண்டு பந்து வீச்சாளர்கள் மட்டுமே வீழ்த்தும் அரிய சாதனை ஏழு முறை நிகழ்த்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.