முல்தான்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பித்தலாட்ட வேலை ஒன்றை செய்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன் முறையாக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளை ஒரே பிட்ச்சில் நடத்தி உள்ளது.
இதன் மூலம் குறுக்கு வழியில் இங்கிலாந்து அணியை வீழ்த்த திட்டமிட்டு இருக்கிறது பாகிஸ்தான். இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முல்தான் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

முதல் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது. அடுத்த போட்டியில் வெற்றி பெற்று அவமானத்திலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி, ஒழுங்காக ஆடாத மூத்த வீரர்களை அணியிலிருந்து நீக்கியது.
அடுத்து முதல் போட்டி நடந்த அதே பிட்ச்சை இரண்டாவது போட்டிக்கும் பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறது. பொதுவாக டெஸ்ட் போட்டியின் பிட்ச் நாள் ஆக, ஆக அதிக விரிசல்களுடன் இருக்கும். முதல் டெஸ்ட் போட்டி ஐந்து நாட்களும் நடைபெற்ற நிலையில் அந்தப் பிட்ச் அதிக விரிசல்களுடன் உள்ளது.
அதே பிட்ச்சில் இரண்டாவது போட்டியில் விளையாடினால் அந்த விரிசல்களின் உதவியுடன் சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து இங்கிலாந்து வீரர்களை திணற வைக்கலாம் என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது பாகிஸ்தான் அணி. அதற்காக இரண்டாவது டெஸ்ட்டுக்கான அணியில் ஒரே ஒரு வேகப் பந்து வீச்சாளரை மட்டும் தேர்வு செய்து, நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை ஆட வைத்துள்ளது பாகிஸ்தான் அணி.
இங்கிலாந்து அணி பழைய பிட்ச்சில் இரண்டாவது போட்டி நடப்பதால் எரிச்சல் அடைந்தாலும் இதை வேறு மாதிரியாக அணுக முடிவு செய்து இருக்கிறது. இங்கிலாந்து அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களுடன் இந்த போட்டியில் களம் இறங்கியுள்ளது. விரிசல்கள் நிறைந்த பிட்ச்சில் வேகப்பந்துவீச்சாளர்கள் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய வாய்ப்பு உள்ளதால் அதை வைத்து பாகிஸ்தான் வீரர்களை காலி செய்ய இங்கிலாந்து திட்டமிட்டு உள்ளது.
பொதுவாக ஆசியாவில் நடைபெறும் போட்டிகளில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு அதிக விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு உள்ளது. ஆனால். சுழற் பந்துவீச்சாளர்களுக்கான பிட்ச்சை உருவாக்க முடியாமல் தவித்து வந்தது. நீண்ட காலமாக அந்த அணி வேகப் பந்துவீச்சாளர்களுக்கான பிட்ச்களையும், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச்களை மட்டுமே பயன்படுத்தி வந்தது.
அதனால், குறுக்கு வழியாக முதல் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்திய அதே பிட்ச்சை பயன்படுத்தி சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து இங்கிலாந்தை வீழ்த்த திட்டமிட்டு உள்ளது. இது சரியான முடிவு தானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இன்று பாகிஸ்தான் செய்யும் இந்த பித்தலாட்ட வேலையை அனைத்து அணிகளும் செய்யத் தொடங்கினால் டெஸ்ட் போட்டிகளின் தரம் கேள்விக் குறியாக மாறிவிடும்.