கொழும்பு: 2026 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்துள்ளது. இதனால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு பெருமளவு மங்கியுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியை விமர்சித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தற்போது கேலிக்கு உள்ளாகியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்பு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோயப் அக்தர், இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாமல் வெளியேற வேண்டும் என்று வெளிப்படையாகவே தனது விருப்பத்தை தெரிவித்தார்.
அவர் பேசுகையில், "இங்கிலாந்து அணி மோசமாக விளையாடி, நாம் எளிதாக இரண்டு புள்ளிகளைப் பெற வேண்டும் என்று நம்புகிறேன். அதேநேரத்தில் இந்திய அணி தொடரை விட்டு வெளியேறி, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறினால் நமது மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது" என்று கூறினார். இந்திய அணி வெளியேற வேண்டும் என அவர் கூறிய கருத்து தற்போது அவருக்கே எதிராக திரும்பியுள்ளது.

பல்லேகலேயில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது. இதனால் அரையிறுதிக்குச் செல்ல மற்ற அணிகளின் போட்டி முடிவுகளை நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. இந்த தோல்வியால் விரக்தியடைந்த அக்தர், நேரலையில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா அணியை வழிநடத்த தகுதியற்றவர் என்று அவர் கடுமையாக விமர்சித்தார். முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சல்மான் அலி ஆகாவை கேப்டனாக நியமித்தபோது, அதனை முதலில் வரவேற்றுப் பாராட்டியவர் இதே சோயப் அக்தர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தனது கருத்தை முற்றிலும் மாற்றியுள்ளார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயித்த 165 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி, ஒரு கட்டத்தில் 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், கேப்டன் ஹாரி ப்ரூக் பொறுப்புடன் விளையாடி 51 பந்துகளில் சதம் விளாசி அணியை சரிவில் இருந்து மீட்டார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வெற்றிக்கான பவுண்டரியை அடிக்க, இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தப் போட்டிக்கு பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, "நாங்கள் இங்கிலாந்துடன் விளையாடி தோல்வியடையும் போதெல்லாம் அதற்கு ஹாரி ப்ரூக் தான் முக்கிய காரணமாக இருக்கிறார். இன்று அவர் பேட்டிங் செய்த விதத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அவர் ரன் குவித்தது எங்களுக்கு மிகவும் சவாலாக அமைந்தது. உஸ்மான் தாரிக் பந்துவீச்சில் இங்கிலாந்து சிறப்பாக ஆடியபோதும் அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். எங்கள் அணி அரையிறுதிக்கு செல்ல ஒரு சதவீத வாய்ப்பு இருந்தாலும், அதற்காக நாங்கள் இறுதிவரை கடுமையாகப் போராடுவோம்" என்று தெரிவித்தார்.
