2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில், இரு நாட்டு ரசிகர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முடிவைத் தொடர்ந்து, பார்வையாளர்கள் பகுதியில் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாகிஸ்தான் அணியின் ரசிகர் ஒருவர், இங்கிலாந்து ரசிகர் ஒருவருடன் கடும் சண்டையில் ஈடுபட்டார். நிலைமை கைமீறிப்போய் கைகலப்பாக மாறும் சூழல் உருவானது.

தொடக்கத்தில் அந்த பாகிஸ்தான் நபர் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசினார். ஆனால், இங்கிலாந்து ரசிகர் தனது கையை முறுக்கி தசைகளை காட்டி பதிலடி கொடுத்ததும், அந்த பாகிஸ்தான் நபர் உடனடியாக பின்வாங்கினார். மைதானத்தில் இங்கிலாந்து வீரர்களிடம் பாகிஸ்தான் அணி எப்படி வீழ்ந்ததோ, அதேபோல அந்த ரசிகரும் அடங்கிப்போனதாக இணையத்தில் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

இந்த மோதல் பெரிதாவதைத் தடுக்க, அருகில் இருந்த இலங்கை ரசிகர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தனர். இங்கிலாந்து ரசிகர் தன் மீது மதுபாட்டில்களை வீசியதாக பாகிஸ்தான் நபர் குற்றம் சாட்டினார். ஆனால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையே, இந்த மோதலை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேக் ஜீனிங்ஸ் என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பாகிஸ்தான் ரசிகர் தொடர்ந்து இதுபோன்று நடந்துகொள்வதாகவும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்த சண்டையின் போது இலங்கை அணியின் ஜெர்சி அணிந்திருந்த வெளிநாட்டு நபர் ஒருவர், அமைதியாக மது அருந்தியபடி வேடிக்கை பார்த்த புகைப்படமும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் அந்த நாட்டு ரசிகர்களை பெரும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. முன்னதாக இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தபோது, வக்கார் அசாம் என்ற ரசிகர் தனது தொலைக்காட்சியை கிரிக்கெட் மட்டையால் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியானது.

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சஹிப்சாதா ஃபர்ஹான் 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தபோதிலும், பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்த இலக்கை இங்கிலாந்து அணி 5 பந்துகள் மீதமிருக்கையில் எட்டி வெற்றி பெற்றது. சூப்பர் 8 சுற்றில் இதுவரை ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாததால் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது. இதன் காரணமாகவே ரசிகர்கள் மைதானத்திலேயே தங்கள் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.