ஆன்டிகுவா : பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தால், நிச்சயம் வெளிப்படையாக அறிவிப்பேன் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
3 டி20 உலகக்கோப்பை, 2 ஆசியக் கோப்பை, ஒரு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியை வழிநடத்திய பாபர், ஒன்றில் கூட அந்த அணிக்கு வென்று கொடுக்கவில்லை. அதிலும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறி இருக்கிறது. இதனால் பலரும் பாபர் அசாமின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின், இந்த சூழலில் கேப்டன் பதவியில் இருக்கக் கூடாது என்று நினைத்தேன். அதனால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ததோடு, நானே வெளிப்படையாக அறிவித்தேன்.
ஆனால் கேப்டன் பதவி மீண்டும் என்னை தேடி வந்ததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே காரணம். நான் நாடு திரும்பிய பின் நிச்சயம் இங்கு நடந்த விவகாரங்கள் குறித்து விவாதிப்போம். ஒருவேளை நான் கேப்டன்சியில் இருந்து விலக வேண்டுமென்றால், நான் வெளிப்படையாகவே அறிவிப்பேன். நான் எதையும் மறைக்கப் போவதில்லை.
என்ன நடந்தாலும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அனை அனைவருக்கும் முன்பாகவே நடக்கும். ஆனால் இப்போது வர்டை கேப்டன்சியில் விலகுவது குறித்து சிந்திக்கவில்லை. நான் ஏற்கனவே சொல்லியதை போல், ஒரு வீரரால் நாங்கள் எந்த ஆட்டத்திலும் தோற்கவில்லை. நான் வெல்லும் போதும், தோற்கும் போதும் அணியாகவே விளையாடுகிறோம். ஆனால் தோல்வியின் போது கேப்டனை தான் கை காட்டுகிறீர்கள்.
ஒவ்வொரு வீரருக்கு பதிலாகவும் நான் விளையாட முடியாது. 11 வீரர்கள் விளையாடுகிறோம் என்றால், ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ரோல் உள்ளது. அதற்காக தான் அவர்கள் அனைவரும் உலகக்கோப்பையில் விளையாட வந்துள்ளனர். ஒரு அணியாக இணைந்து விளையாட முடியவில்லை என்று நினைக்கிறேன். அதேபோல் எங்களால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.