கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவிடம் அடைந்த படுதோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் அணியில் சூழல் சரியில்லை என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. நமீபியாவுக்கு எதிரான போட்டியின் போது, கேப்டன் சல்மான் அலி ஆகா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் இடையே நடந்த காரசாரமான மோதல் கேமராவில் பதிவாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், நமீபியாவுக்கு எதிரான போட்டி பாகிஸ்தானுக்கு வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்தது. இதில் தோற்றால் தொடரை விட்டு வெளியேற நேரிடும் என்ற அழுத்தத்துடன் பாகிஸ்தான் களமிறங்கியது.

கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் சல்மான் அலி ஆகா 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியதும், பயிற்சியாளர் மைக் ஹெசன் அவரிடம் ஏதோ கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த சல்மான் அலி ஆகா, பயிற்சியாளரை முறைத்துப் பார்த்தவாறே கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை ஓங்கி கீழே அடித்தார். கேப்டனின் இந்தச் செயலால் பயிற்சியாளர் ஹெசன் சற்றே அதிர்ச்சியடைந்தார். மைதானத்தில் இருந்த கேமராக்களில் இந்தக் காட்சி பதிவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோல்வி பயம் மற்றும் அழுத்தம் காரணமாகவே கேப்டன் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின் போது, இவர்களுக்கு அருகில் அமர்ந்திருந்த முன்னாள் கேப்டன் பாபர் அசாம் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் இடையே நடக்கும் இந்தச் சண்டையில் தலையிடாமல், அவர் சங்கடத்துடன் அமர்ந்திருந்த காட்சிகள் பரிதாபமாக இருந்தன.
மேலும், இந்தப் போட்டியில் பாபர் அசாமை பாகிஸ்தான் நிர்வாகம் நடத்தும் விதம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. வழக்கமாக டாப் ஆர்டர் வீரராகக் களமிறங்கும் பாபர் அசாம், இந்த முறை பேட்டிங் வரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்டார். அவருக்கு முன்னதாகக் குவாஜா நபே மற்றும் ஷதாப் கான் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிராகப் பாபர் அசாம் மோசமான ஷாட்களை ஆடி விக்கெட்டை இழந்ததே, இந்தத் இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
மேலும், அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்களில் 31 ரன்களை வாரி வழங்கியதால், அவருக்குப் பதில் முகமது அப்பாஸ் அப்ரிடி சேர்க்கப்பட்டார்.
அணி நிர்வாகப் பிரச்சனைகள் ஒருபுறம் இருந்தாலும், களத்தில் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் சாஹிப்சதா ஃபர்ஹான் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய நமீபியா 97 ரன்களுக்கு சுருண்டது. இதை அடுத்து 102 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு கடைசி அணியாக முன்னேறியது பாகிஸ்தான்.