கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா சாவா போராட்டம் காத்திருக்கிறது. குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் நமீபியா அணியை எதிர்கொள்ளும் பாகிஸ்தான், இதில் தோற்றால் தொடரை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது.
இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததால், பாகிஸ்தான் அணியின் நிகர ரன் ரேட் அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் அமெரிக்காவுக்குக் கீழே பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. சூப்பர் 8 சுற்றுக்குச் செல்ல வேண்டுமானால், நமீபியாவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக மழை பெய்தால் கிரிக்கெட் அணிகள் கவலைப்படும். ஆனால் இன்றைய சூழலில் மழை பெய்தால் பாகிஸ்தான் அணிக்குத்தான் கொண்டாட்டம். ஏனெனில், மழை காரணமாக ஆட்டம் ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அந்த ஒரு புள்ளி கிடைத்தாலே போதும், பாகிஸ்தான் அணி அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சூப்பர் 8 சுற்றுக்கு எளிதாகத் தகுதி பெற்றுவிடும்.
ஆனால், இயற்கையே பாகிஸ்தானை களத்தில் இறங்கி ஆடச் சொல்வது போல வானிலை அறிக்கை அமைந்துள்ளது. கொழும்பிவில் இன்று (பிப்ரவரி 18) மதியம் 1 மணி முதல் 3 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் ஆட்டம் தொடங்குவதில் சிறிது தாமதம் ஏற்படலாம்.
இருப்பினும், போட்டி நடைபெறும் நேரத்தில் மழை இருக்காது என்றும், 100 சதவீதம் வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் முழுமையான ஆட்டம் நடைபெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாகிஸ்தான் மழையை நம்பித் தப்பிக்க முடியாது, நமீபியாவை வீழ்த்தினால் மட்டுமே அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியும் என்ற நிலையை இயற்கை உருவாக்கியுள்ளது.
நமீபியா அணி ஏற்கனவே நெதர்லாந்து, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறிவிட்டது. இழப்பதற்கு எதுவும் இல்லாத நிலையில், கடைசிப் போட்டியில் ஒரு பெரிய அணியை வீழ்த்தி ஆறுதல் தேட அந்த அணி முயற்சிக்கும். எந்த வித அழுத்தமும் இன்றி நமீபியா வீரர்கள் விளையாடினால், அது பதற்றத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு ஆபத்தாக முடியலாம்.
ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிய நிலையில், பாகிஸ்தானும் அந்தப் பட்டியலில் இணையுமா அல்லது கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமா என்பது இன்று தெரிந்துவிடும்.